ஐநா சபைக்கு... அமெரிக்கா சார்பில்... இந்தியப் பெண்களை அனுப்பி அழகு பார்க்கும் பைடன் அரசு
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பொறுப்புகளுக்கு இரண்டு இந்திய அமெரிக்கப் பெண்களை பைடன் அரசு நியமித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபரானார். அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார்.
அதேபோல அந்நாட்டின் 49ஆவது துணை அதிபராக கமாலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பைடன் நிர்வாகத்தில் இந்தியர்கள்
அதிபர் பைடன் தனது நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு அதிகமாக இந்திய அமெரிக்கர்களை நியமித்து வருகிறார். இதுவரை பைடன் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளுக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ள இந்திய அமெரிக்கர்களுக்கு இது மிக முக்கியமான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
ஐநாவிற்கு இந்தியர்களை அனுப்பும் பைடன்
இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள இந்தியர்களுக்கு மற்றொரு அங்கீகாரமாக ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பொறுப்புகளுக்கு இரண்டு இந்திய அமெரிக்கப் பெண்களை பைடன் அரசு நியமித்துள்ளது. அதன்படி ஐநா சபைக்கான அமெரிக்கத் தூதரின் மூத்த கொள்கை ஆலோசகராக சோஹினி சாட்டர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ஐநாவில் அமெரிக்காவின் கொள்கை ஆலோசகராக அதிதி கோரூர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே இந்திய அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சோஹினி சாட்டர்ஜி
சோஹினி சாட்டர்ஜி தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக உள்ளார். முன்னதாக, அவர் யு.எஸ்.ஏ.ஐ.டி அமைப்பிலும் கொள்கை, திட்டமிடல் மற்றும் கற்றல் பணியகத்தில் பணியாற்றினார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அடுத்த இரண்டு ஆண்டுகள் தற்காலிக உறுப்பினராகும் இந்தியா, பைடன் நிர்வாகத்துடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று சோஹினி சாட்டர்ஜி கடந்த நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார். மேலும், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றை பைடனுடன் இணைந்து இந்தியா எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இவர் ஒபாமா நிர்வாகத்தில் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றியவர்
அதிதி கோரூர்
அதேபோல அதிதி கோரூர் ஐ.நாவில் அமைதி காக்கும் பிரிவின் நிபுணர். அவர் தற்போது ஸ்டிம்சன் மையத்தின் இயக்குநராக உள்ளார். அமைதி காக்கும் பணிகளுக்கு மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது அங்குப் பொதுமக்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை இவர் மேற்கொண்டு வருகிறார். இவர் இந்தியா மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.