ஜோபிடன், டிரம்ப்- வெற்றி பெறுபவர் யார்?.. அமெரிக்கர்களின் மனநிலை என்ன?.. பரபர கருத்து கணிப்புகள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தங்களது வேட்பாளர்கள் தோற்றால் அந்த தேர்தல் முடிவுகளை ஏற்க மாட்டோம் என ஜோ பிடன், டிரம்ப் ஆகியோரின் வேட்பாளர்களில் 10-இல் 4 பேர் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்கள்.
தேர்தல் நெருங்கும் நிலையில் இருவரும் அனல் பறக்கும் பிரசாரங்களை முன்வைத்து வருகிறார்கள். கருத்து கணிப்பில் ஜோ பிடன்தான் முன்னிலை வகித்து வருகிறார். அது போல் 2016-இல் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் வெற்றி பெற்றது போல் இந்த முறை டிரம்புக்கு வெற்றி வாய்ப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரங்கள்
அதே வேளையில் அந்த மாகாணங்களில் தேர்தல் பிரசாரங்களின் போது டிரம்புக்கு ஏராளமான கூட்டம் கூடுகிறது. உலகமே உற்றுநோக்கும் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து ரியூட்டர்ஸ் கருத்து கணிப்புகளை எடுத்தது.
ஆதரவாளர்கள்
கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நிகழ்ந்த கருத்து கணிப்பில் ஜோபிடனின் ஆதரவாளர்களில் 43 சதவீதம் டிரம்பின் வெற்றியை விரும்பவில்லை. அது போல் டிரம்பின் ஆதரவாளர்களில் 41 சதவீதம் பேர் ஜோ பிடனின் வெற்றியை விரும்பவில்லை. ஆக இரு ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளர்களை தவிர்த்து மற்றவர் வெற்றி பெறுவதை ஏற்கமாட்டோம் என கூறியுள்ளார்கள்.
அமெரிக்க அதிகாரிகள்
பிடன் ஆதரவாளர்களில் 22 சதவீதம் பேரும், டிரம்ப் ஆதரவாளர்களில் 16 சதவீதம் பேரும் தங்கள் வேட்பாளர் தோல்வியுற்றால் சாலை மறியல் போராட்டங்களிலும் வன்முறையிலும் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் ரஷ்யாவும் ஈரானும் அமெரிக்க வாக்களிப்பு அமைப்பை ஹேக் செய்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
வாக்கு வித்தியாசம்
டிரம்பை காட்டிலும் 8 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் பிடன் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார்கள். 51 சதவீத மக்கள் பிடனுக்கு ஆதரவாகவும் 43 சதவீதம் மக்கள் டிரம்புக்கு ஆதரவாகவும் உள்ளார்கள். விஸ்கான்சின் மற்றும் மிக்சிகன் ஆகிய மாகாணங்களில் பிடனும் முன்னணியில் உள்ளார். ஆனால் பென்னிசில்வானியா, புளோரிடா, அரிசோனா, வடக்கு கரோலினா ஆகிய பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களில் இருவரிடையே போட்டி என்பது மிகவும் கடுமையாக உள்ளது.
ஆன்லைன் கருத்து கணிப்பு
அது போல் ரியூட்டர்ஸ் அல்லது இப்சாஸ் கருத்து கணிப்பு இணையதளம் வாயிலாகவும் நடத்தப்பட்டது. இதில் 2,649 அமெரிக்கர்கள் தங்கள் விருப்பத்தை பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் 1,039 பேர் டிரம்பிற்கு வாக்களித்ததாகவும் சிலர் டிரம்பிற்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். அது போல் 1,153 பேர் பிடனுக்கு ஆதரவாக உள்ளனர்.