அமெரிக்கா: இந்த நார்வால் இனி யார்கிட்டயும் வாலாட்டாது மக்களே!
வாஷிங்டன்: அமெரிக்காவில் முகத்தில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டியை தன்னார்வ அமைப்பு ஒன்று மீட்டெடுத்து பராமரித்து வருகிறது.
நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ சம்பவங்களை பார்த்து வருகிறோம். அதில் ஆட்டுத் தலையுடன் பிறந்த கன்று குட்டி, மனித முகத்துடன் பிறந்த குரங்கு குட்டி, 2 தலைகள் ஒரு கண்ணுடன் பிறந்த கன்றுக் குட்டி, 6 விரல்களுடன் பிறந்த குழந்தை என பல்வேறு வினோதமான சம்பவங்களை பார்த்திருக்கிறோம்.
கான்சாஸ்
அந்த வகையில் அமெரிக்காவில் முகத்தில் வாலுடன் நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த குட்டி அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் கான்சாஸ் நகர தெருவில் வலம் வந்து கொண்டிருந்தது.
செல்லப் பிராணி
இதையடுத்து மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பு இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது. இது குறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், 7 ஆண்டுகளாக இந்த அமைப்பு ஆதரவின்றி காணப்படும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறோம்.
பனியால் உறைந்த நாய்
பிறப்பிலேயே உடலுறுப்பில் வளர்ச்சி இல்லாத நாய்களை பராமரித்திருக்கிறோம். ஆனால் இந்தமாதிரி முகத்தில் வாலுடைய நாயை நாங்கள் பார்த்ததே இல்லை. தெருவோரத்தில் பனியால் உறைந்து கிடந்த குட்டியை மீட்டு நார்வால் என பெயரிட்டோம்.
ஆன்லைனில் டிரெண்ட்
நார்வால் எனப்படுவது ஆர்க்டிக் கடலில் வாழும் திமிங்கலம் ஆகும். இந்த திமிங்கலத்தின் தலையில் முன்புறம் தந்தம் போன்ற கூர்மையான உறுப்பு இருக்கும். நாய்க் குட்டிக்கு இந்த வாலால் எந்த பாதிப்பும் இல்லை. இந்த நாய்க்குட்டி யூனிகார்ன் பப்பி என ஆன்லைனில் டிரெண்டாகி வருகிறது. இந்த குட்டியை பார்ப்போர் அதனுடன் செல்பி எடுத்து வருகின்றனர்.