வலுவான இந்தியா... சீனாவின் அடக்குமுறைகளை எதிர்க்க உதவும்... அமெரிக்கா அறிக்கை
வாஷிங்டன்: பசிபிக் பகுதியில் அமைதியைப் பாதுகாக்கவும் சீனாவின் அடக்குமுறைகளை எதிர்கொள்ளவும் வலுவான இந்தியா என்பது சரியாக இருக்கும் என்று அமெரிக்க தெரிவித்துள்ளது.
டிரம்ப் அரசு இந்தோ-பசிபிக் அமெரிக்காவின் மூலோபாய கட்டமைப்பு கொள்கையை உருவாக்கியிருந்தது. இந்தக் கொள்கை குறித்த தகவல்கள் முன்னாள் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மாட் பாட்டிங்கர் உத்தரவின் அடிப்படையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டட வன்முறையைத் தொடர்ந்து மாட் பாட்டிங்கர் ராஜினாமா செய்தார், இதையடுத்து பொறுப்பேற்ற ராபர்ட் ஓ பிரையன், இந்த கொள்கையின் ஒரு பகுதியை வெளியிட்டார். பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கும், முறையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இது, தற்போது வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா கூட்டணி நாடு
அதில், "பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவின் முதல் விருப்ப கூட்டணி நாடாக எப்போதும் இருப்பது அமெரிக்கா தான். கடல் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதிலும் இரு நாடுகளுக்குப் பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளன. எல்லைப் பகுதிகளில் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
தெற்காசியாவில் இந்தியா முதன்மையான நாடு
தெற்காசியாவில் இந்தியா முதன்மையான நாடாகத் திகழ்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளுடன் சிறப்பான பொருளாதார, பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர ஒத்துழைப்பை இந்தியா கொண்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா தான் சீனாவை சமாளிக்கும்
ஒத்த நாடுகளின் ஒத்துழைப்புடன் இருக்கும் வலுவான இந்தியா என்பது சீனாவின் அத்துமீறல்களுக்குச் சரியான பதிலடியாக இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகள், தங்கள் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் செயல்படும் சீனாவுக்கு எதிராகவே உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவை உயர்ந்த வேண்டும்
பாதுகாப்பு திறனில் இந்தியாவை உயர்த்துவதன் மூலம் இதை அடைய முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்புகளை விரிவுபடுத்துவது, இந்தியாவுடனான பாதுகாப்பு வர்த்தகத்தை அதிகப்படுத்துவது, பாதுகாப்பு தொழில்நுட்பத்தை அதிகப்படுத்துவது உள்ளிட்டவை மூலம் இதை அடைய முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆதரவளிக்கும்
மேலும், "உலக அணுசக்தி சப்ளையர்கள் குழுவில் இந்தியாவை உறுப்பினராக்குவது, உள்நாட்டுப் பொருளாதார சீர்திருத்தம், கிழக்கு ஆசியா உச்சி மாநாட்டில் இந்தியாவின் அதிகாரத்தை விரிவுபடுத்துவது ஆகியவற்றில் அமெரிக்கா ஆதரவளிக்கும். சீனாவுடனான எல்லைப் பிரச்சினை உள்ளிட்டவற்றில் ராஜதந்திர, ராணுவ மற்றும் உளவுத்துறை ரீதியான ஆதரவை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், உலகின் முக்கிய நாடாக உருமாற வேண்டும் என்ற இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்ற அமெரிக்கா உதவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.