அமெரிக்கா காவல்துறையில் மிக பெரிய மோசடி.. ஒற்றை ஆளாக 11 மில்லியன் டாலரை சுருட்டிய போலீஸ் அதிகாரி
வாஷிங்டன்: அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் தனி ஆளாக 11 மில்லியன் டாலரை மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த கிரேக் ஹார்பாக். 50 வயதான இவர் அம்மாகாணத்தின் டாட்ஜ் கவுண்டியில் துணை ஷெரிப்பாக பணியாற்றி வந்தார். இவர் தனி ஆளாக சுமார் 11 மில்லியன் டாலரை மோசடி செய்துள்ளார்.
இவர் கடந்த 2008ஆம் ஆண்டு டாக்டிகள் சொல்யூசன் கியர் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் இத்தனை ஆண்டுகளாக எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளவில்லை.
இருப்பினும், அமெரிக்காவிலுள்ள 11 மாகாண போலீஸ் துறைக்குத் துப்பாக்கிகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களைப் பல ஆண்டுகளாக சப்ளை செய்ததைப் போல போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளார். மேலும், முதலீட்டாளர்களை நம்ப வைக்கப் போலியான புகைப்படங்களையும் பயன்படுத்தியுள்ளார்.
இவரே ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் யாரும் கிரேக் ஹார்பாக்கை பெரிதாகச் சந்தேகிக்கவில்லை. தன்னிடம் இருக்கும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கி, உள்ளிட்ட பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 11 மில்லியன் டாலரை முதலீடாகப் பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக இவர் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். நீண்ட விசாரணைக்குப் பின், கிரேக் ஹார்பாக் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். மொத்தம் இவர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் வரி ஏய்ப்பு உள்ளிட்ட 12 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள பணமோசடி குற்றச்சாட்டிற்காகவே இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம். அதேபோல மோசடி செய்த 12 மில்லயன் டாலரை இவர் என்ன செய்தார் என்பது குறித்தும் தெரியவில்லை. இது தொடர்பாகக் காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். தான் மோசடி செய்த பணத்தை விரைவில் உரியவர்களுக்குத் திருப்பி அளித்துவிடுவேன் என்று தற்போது சிறையிலுள்ள கிரேக் ஹார்பாக் தெரிவித்துள்ளார்.