அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை.. பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி கேபிட்டல் கட்டட வளாகத்திற்குள் நுழைந்த போது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியாகிவிட்ட நிலையில் மேலும் 3 பேர் கீழே விழுந்து நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர். இதனால் இந்த கலவரத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று ஜோபிடன் வென்றார். ஆனால் இந்த வெற்றி யை டிரம்ப் ஏற்க மறுக்கிறார். ஜோபிடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக டிரம்பின் குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். அது போல் வாஷிங்டன்னில் உள்ள கேபிட்டல் கட்டடத்தில் காங்கிரஸின் கூட்டு கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
எதையும் அனுமதிக்க மாட்டேன்... அடம்பிடிக்கும் டிரம்ப்... செக் வைத்த அமெரிக்க நாடாளுமன்றம்
ஆதரவாளர்கள் வன்முறை
எல்க்டோரல் காலேஜ் வாக்குளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி தொடங்கியது. இந்த பணி நடைபெற்றால் ஜோ பிடன் வெற்றியாளர் என தீர்மானிக்கப்படுவார். இதை தடுக்கும் விதமாக கேபிட்டல் கட்டடத்திற்கும் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் தடுக்க முயன்றனர்.
எம்பிக்கள் வெளியேற்றம்
ஆனால் அவர்கள் தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர். கட்டடத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து போலீஸார் அங்கிருந்த எம்பிக்கள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள், அது போல் துணை அதிபர் மைக் பென்ஸும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
கதவுகள் அடைப்பு
கேபிட்டல் கட்டடத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியாகிவிட்டார். மேலும் போராட்டக்காரர்கள்- போலீஸாருக்கு இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் 3 பேர் கீழே விழுந்து மரணமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் பல அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கண்ணீர் புகை
போலீஸார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டக்காரர்களிடம் இருந்து ஆயுதங்கள பறிமுதல் செய்யப்பட்டன. வரலாறு காணாத அளவுக்கு நாடாளுமன்றத்தில் வன்முறை நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தை பலர் கண்டித்துள்ளார்கள்.