சமீபத்தில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. இந்தியாவை இணைத்துவிட்டார் மோடி.. அட.. சொல்வது 'டைம்' இதழ்
வாஷிங்டன்: நரேந்திர மோடி பிளவுவாதிகளின் தலைவர் என்று அமெரிக்காவின் முன்னணி இதழ், 'டைம்' தெரிவித்திருந்த நிலையில், இப்போது அதே இதழின், வெப்சைட்டில் சமீபத்தில் எந்த ஒரு பிரதமரும் செய்யாத அளவுக்கு இந்தியாவை மோடி இணைத்துள்ளார் என்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை டைம் வெப்சைட்டில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோடி தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டதோடு, தனக்கு கிடைத்த ஆதரவு வட்டத்தையும் அதிகரித்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டு அந்த கட்டுரை விளக்கமாக மோடியின் வெற்றிக்கான காரணங்கள் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.
லண்டனை சேர்ந்த மீடியா நிறுவனமான, இந்தியா ஐஎன்சி, தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான, மனோஜ் லட்வா இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அதை டைம் வெப்சைட் வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடி அரசு, 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு, அமல்படுத்தியபோது அது மக்களை பாதித்தது என்றாலும்கூட, அது குறுகிய கால பாதிப்புத்தான். இதன் பிறகு பல்வேறு விஷயங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டன. வரி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கப்பட்டது. ஜன்தன் திட்டம் போன்றவை ஏழைகளுக்கு பலன் அளித்தன என்று வரிசைப்படுத்தியுள்ளது கட்டுரை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின், தலைவராக மோடி தனது இரண்டாம் பதவி காலத்திற்கு வந்தாலும், இன்னும் பணிகள் நிறைய பாக்கி உள்ளது. சமீப காலத்தில் எந்த பிரதமரும் இணைக்காத அளவுக்கு இந்தியாவை இணைத்து ஆதரவை பெற்றுள்ளார் மோடி, என்று எழுதியுள்ளார் லட்வா.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐ.நா. உட்பட, பல்வேறு அமைப்புகளும், மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்து வருகின்றன.
"மோடியின் இந்தியா அதன் அளவு மற்றும் திறன் ஆகியவற்றிற்கு தகுதியான ஒரு விகிதத்தில் இப்போதுதான் முன்னேறி வருகிறது". "சமூக அமைதியின்மை சம்பவங்களின் போது மௌனமாக இருப்பதற்காக மோடியை விமர்சித்திருக்கலாம். ஆனால் இந்தியாவின் சில பிரிவினரின் பிரிச்சினைகளுக்கான, மூல காரணங்களை நேரடியாக சரி செய்ததற்காக, இந்திய வாக்காளர்களால் வாக்குப்பதிவு இயந்திரத்தில், மோடிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய இந்தியாவிற்கான, மோடியின் கனவு இன்னும் அப்படியேதான் உள்ளது, "என லட்வா கூறியுள்ளார்.
முன்னதாக, இந்திய பத்திரிக்கையாளர் தவ்லீங் சிங், மற்றும் மறைந்த பாகிஸ்தானிய அரசியல்வாதியுமான சல்மானான் தசீரின் மகனான ஆதிஷ் தசீர் எழுதிய 'இந்தியாவின் பிளவுவாதி தலைவர்' என்ற தலைப்பிலான கட்டுரை, இந்த மாத தொடக்கத்தில் டைம் இதழின் கவர் செய்திக் கட்டுரையாக வெளியாகியிருந்தது.
இவர் பாகிஸ்தானை சேர்ந்தவரின் மகன் என்பதால், இப்படியான கட்டுரையை எழுதிவிட்டார் என பாஜக குற்றம்சாட்டியிருந்தது நினைவிருக்கலாம்.