ஆஹா.. இத்தாலி, ஸ்பெயினா இப்படி.. கொரோனாவை வென்ற ஐரோப்பிய நாடுகள்! இந்த லிஸ்டை பாருங்க!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு என்பது வேகமாக குறைந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டன. அங்கு கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.
உலகில் கொரோனா தொற்றால் 1,09,70,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 61,34,615 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 5,23,172 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 43,12,932 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,
இதுவரை இல்லாத உச்சம்.. ஒரே நாளில் தமிழகத்தில் 4343 பேருக்கு கொரோனா.. 1 லட்சத்தை நெருங்குகிறது!
பிரேசிலில் அதிகரிப்பு
இந்நிலையில் கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்தாலும், உயிரிழப்பு ஏற்படுவது கணிசமாக குறைந்து வருகிறது. அதிகபட்சமாக பிரேசிலில் மட்டுமே ஒரே நாளில் 1277 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் அமெரிக்காவில் 676 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தில் உள்ள மெக்ஸிகோவில் 648 பேரும், 4வது இடத்தில் உள்ள இந்தியாவில் 438 பேரும் இறந்துள்ளனர். 5வது இடத்தில் உள்ள ரஷ்யாவில் 216 பேர் இறந்துள்ளனர்.
ஜெர்மனி இங்கிலாந்து
கொரோனா தொற்று பரவிய போது ஆரம்பத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இன்று கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யாவில் 147 பேரும், அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் மட்டும் 89 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.
ஐரோப்பா வென்றது
மற்றபடி வேறு எந்த நாட்டிலும் கொரோனாவால் 50 பேர் கூட ஒரு நாளில் இறக்கவில்லை. அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு என்பது 20க்கும் கீழ் என்ற நிலையை எட்டிவிட்டன. ஒரு காலத்தில் தினமும் ஆயிரம் பேர் இறந்த இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இப்போது உயிரிழப்பு ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது. பாதிப்பும் முற்றிலும் குறைந்துவிட்டது.
உயிரிழப்பு மிக மிக குறைவு
ஆசியாவிலேயே கொரோனா பாதிப்பு இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது. ஒரே நாளில் 21948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்பு மிக மிக குறைவாக உள்ளது. ஒரே நாளில் 377 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் 627,168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் அதிகரித்த போதிலும் உயிரிழப்புகள் என்பது வேகமாக குறைந்துவிட்டது. அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. விரைவில் கொரோனாவில் இருந்து உலகம் மீளும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.