வழக்கு போட்டு வனத்தை காப்பாற்றிய பழங்குடியினர்.. உடனே பற்றி எரியும் அமேசான் காடு.. நினைச்சாலே பதறுதே
Recommended Video
வாஷிங்டன்: அமேசான் மழைக்காடுகளில் பற்றியெரியும் நெருப்பு மற்றும் ஒரு பெரிய எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக ஒரு பழங்குடியினர் சமீபத்தில் வென்ற வழக்கு ஆகியவை நடுவே தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலகளாவிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உலகின் மிகப் பெரிய மழைக்காடு அமேசான். இந்த காடுகளுக்குள் 9 நாடுகள் அடங்கி உள்ளன என்றால் நீங்களே அதன் பிரமாண்டத்தை உணர முடியும்.
உலகின் மிகவும் அடர்ந்த காடான இந்த காட்டுப் பகுதிகளில் பல வகை அரிய மரங்கள், மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. மிக பழமையான பழங்குடியின மக்களும் இங்கு வசித்து வருகின்றனர்.
பழங்குடியினர்
ஈக்குவடார் நாட்டின் எல்லையில் உள்ள பாஸ்தாசா பகுதியில் வோராணி எனப்படும் பழங்குடியினர் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு எண்ணெய் வளமும் ஏராளமாக உள்ளது. எனவே எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் வேட்டைக்காடாக இப்பகுதியை மாற்ற முயன்றன. ஈக்குவடார் அரசும் இதற்கு உதவ முன்வந்தது.
எண்ணை நிறுவனங்கள்
எனவே வோராணி பழங்குடியினர் அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். எண்ணெய் நிறுவனத்தை எங்கள் இடத்திற்குள் குத்தகைக்கு விட்டால், தங்கள் வாழ்வாதாரம் அழியும் என்றும், வனப்பகுதிக்கு அழிவு ஏற்படும் எனவும் வழக்கில் தெரிவித்தனர். அரசோ வெறும், ஆய்வு மட்டும்தான் செய்யப்போகிறோம் என சப்பைக்கட்டு கட்டியது. ஆனால், அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பிரிவின் கீழ் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவதையும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் இப்பகுதியை நம்பி உள்ளதையும் கருத்தில் கொண்டு எண்ணெய் கிணறுகள் தோண்ட அரசுக்கு தடை விதித்தது நீதிமன்றம். கடந்த மே மாதம்தான் இந்த தீர்ப்பு வெளியாயானது.
பராகுவே பகுதி
இந்த நிலையில்தான், அமேசான் காட்டுத் தீயை இந்த வழக்கின் தீர்ப்புடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பழங்குடியினருக்கு எதிராக கார்பொரேட்டுகள் நடத்தும் சதி என்று, இதைப் பற்றி வர்ணிக்கிறார்கள் அவர்கள். தற்போது எரியும் அமேசான் தீ ஈக்வடாரில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள பராகுவேயில் உள்ளது. இருந்தாலும் நெட்டிசன்கள் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.
இந்த காட்டுத் தீயால், அதிக வனப்பகுதிகள் அழிக்கப்படலாம் என்பது அவர்கள் குற்றச்சாட்டு.
|
பாதுகாப்புக்கு ஆட்டம்
பழங்குடியினர் தொடர்ந்த வழக்கில் பெற்ற வெற்றி அமேசான் மழைக்காடுகளின் பாதுகாப்பிற்கு அடித்தளமாக அமைந்தது. இருப்பினும், இரண்டு வாரங்களுக்கும் மேலாக எரியும் தீ மோசமான ஒன்றின் ஆரம்பம். அந்த பாதுகாப்பு அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துவிட்டது என நெட்டிசன்கள் பலரும் வாதிடுகிறார்கள்.