அமெரிக்க அதிபர் தேர்தல்... டிரம்ப் - ஜோ பிடன் இடையே நேரடி விவாதம்... உற்றுநோக்கும் உலக நாடுகள்..!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் - ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் நடைபெறுகிறது.
ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெறும் இந்த விவாதம் அமெரிக்க நேரப்படி செவ்வாய்கிழமை இரவு 9.30 மணிக்கும் இந்திய நேரப்படி புதன்கிழமை காலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பப்படுகிறது.
90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் மிக ஆக்ரோஷமாக பேசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லையில் சீனா தொல்லை.. அதிரடியாக அமெரிக்காவிடம் ரூ. 2,290 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் இந்தியா
நவம்பர் 3-ம் தேதி
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் நிலையில் இப்போதே அங்கு அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் ஒருவரை ஒருவர் போகும் இடங்களெல்லாம் விமர்சித்து பேசி வருகின்றனர். ஜோ பிடனை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என டிரம்பும், டிரம்ப் வருமான வரி கணக்கு செலுத்துவதில்லை என ஜோ பிடனும் பரஸ்பர மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
3 விவாதங்கள்
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவோர் ஒரே மேடையில் ஒன் டூ ஒன்னாக 3 விவாதங்களும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவோர் ஒரு விவாதமும் நடத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் செப்டம்பர் 29-ம் தேதி (அதாவது இந்திய நேரப்படி இன்று) ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டிலும், அக்டோபர் 15-ம் தேதி புளோரிடா மாகாணம் மியாமியிலும், அக்டோபர் 22-ம் தேதி டென்னஸி மாகாணம் நாஷ்வில்லிலும் டிரம்பும்- ஜோபிடனும் விவாதம் நடத்துகிறார்கள்.
நேரலை ஒளிப்பரப்பு
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் நடத்தும் நேரடி விவாதம் என்பதால் இதனை உலகம் முழுவதும் இருந்தும் கோடிக்கணக்கானோர் காண்பார்கள். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் அவர்கள் இருவரது சாதனைகள், வாக்குறுதிகள், கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மிக ஆழமாக விவாதிக்கப்படும். கிறிஸ் வாலஸ் என்பவர் இந்த விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
பார்வையாளர்கள்
அமெரிக்காவில் வழக்கமாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவாதிக்கும் போது அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள். ஆனால் இந்தாண்டு கொரோனா தாக்கமும் பரவலும் இருப்பதால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களாக அரங்கிற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல் இருக்கைகளும் சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டுள்ளன.