இந்தியா மறுப்புக்கு பிறகு பல்டி அடித்த அமெரிக்கா.. டிரம்பின் காஷ்மீர் பேச்சு குறித்து புதிய விளக்கம்
வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக உள்ள காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்ய மத்தியஸ்தராக செயல்பட மோடி அழைத்ததாக கூறியிருந்த நிலையில் அமெரிக்கா அந்த கருத்தை வாபஸ் பெறும் வகையில் புதிய விளக்கத்தை அளித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்தார் இம்ரான். அப்போது அவரிடம் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா- பாகிஸ்தானுக்கு மத்தியஸ்தராக இருந்து தீர்த்து வைக்குமாறு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ஓசாகாவில் நடந்த ஜி20 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கோரியதாக டிரம்ப் கூறியிருந்தார்.
சிம்லா ஒப்பந்தம்
அப்போது டிரம்ப், தன்னால் இந்த பிரச்சினை தீரும் என்றால் அதற்கு நான் மத்தியஸ்தராக இருக்க விரும்புகிறேன் என மோடியிடம் கூறியிருந்தேன். இதற்கு இம்ரான் கானும் சரி என சொல்லியுள்ளார். காஷ்மீர் விவகாரம் என்பது இரு நாடுகளுக்கிடையேயான விவகாரம். இதில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்பதே சிம்லா ஒப்பந்தமாகும்.
பரபரப்பு விளக்கம்
இந்த நிலையில் மோடி கூறியதாக டிரம்ப் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மோடி அவ்வாறு டிரம்பிடம் கோரவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.
முக்கியம்
அதில் பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக அந்நாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீவிரவாத இயக்கங்களை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும்.
வரவேற்க தயார்
காஷ்மீர் பிரச்சினை என்பது இந்தியா- பாகிஸ்தான் இரு தரப்பு உறவுகளால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய ஒன்று என்பதை நாங்கள் நம்புகிறோம். அமெரிக்கா மற்றும் முக்கிய நாடுகளின் நட்பு நாடு இந்தியா. அந்த வகையில் உலகம் முழுவதும் தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எதிர்க்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் அதை வரவேற்க தயார் என தெரிவித்துள்ளது.