அமெரிக்க கர்ப்பிணி பெண் கொலை: கொடூர கொலையாளி லிசாவுக்கு மரண தண்டனை நிறைவேறியது
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்ணை குழந்தையுடன் கொன்ற கொடூர கொலையாளி லிசாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
வாஷிங்டன்: அமெரிக்காவில் 23 வயது கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்த பெண் கொலையாளிக்கு 16 ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிடோரி மாகாணத்தைச் சேர்ந்த லிசா மாண்ட்கோமேரி என்பவர், 23 வயதான பாபி ஜோ ஸ்டினட் என்ற கர்ப்பிணி பெண்ணை கயிற்றால் கழுத்தை நெறித்து, பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மரணமடைந்த அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை எடுத்துக் கொண்டு தனது குழந்தை என கூறியுள்ளார் கொலையாளி லிசா மாண்ட்கோமேரி. இந்த வழக்கு விசாரணை கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்த பெண் குற்றவாளிக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.
கொலையாளி லிசாவுக்கு குழந்தையின்மை பிரச்சினை இருந்ததால், இந்த படு பாதக செயலை செய்துள்ளார். பாபி ஜோ நாய்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார். எனவே, நாய் வாங்கும் வாடிக்கையாளர் போல் பாபி ஜோவிடம் சென்று, கர்ப்பிணி பெண் என்றும் பாராமல், அவரின் கழுத்தை நெறித்து, உடலை வெட்டி குழந்தையை வெளியே எடுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
2007ஆம் ஆண்டில் லிசா கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இவ்வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அவருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று லிசாவுக்கு உயிரை கொல்லும் ஊசி போடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க நேரப்படி நேற்று நள்ளிரவு 1.31 மணிக்கு லிசா மோண்ட்கோமரி இறந்துவிட்டதாக அமெரிக்க நீதித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர், 6 வயது சிறுவனைக் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக 1953 ஆம் ஆண்டு போன்னி பிரவுன் ஹெடி என்ற பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன்பின், 68 ஆண்டுகள் கழித்து பெண் கைதிக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தடைகளை அகற்றி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.