கொரோனாவுடன் மக்கள் சாகப் பழகிட்டாங்கன்னு சொல்லுங்க டிரம்ப்... ஜோ பிடன் சுளீர் அட்டாக்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவுடன் மக்கள் வாழப் பழகிவிட்டார்கள் என்பதற்கு பதிலாக உயிரிழக்க பழகிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கடுமையாக சாடினார் ஜோ பிடன்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால் டிரம்ப்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் (ஜோ பைடன்) களத்தில் உள்ளனர்.
ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கு நல்லது செய்தது நான் மட்டுமே -டிரம்ப்
டிரம்ப்- ஜோ பிடன் விவாதம்
டிரம்ப்பும் ஜோ பிடனும் ஏற்கனவே நேரடி விவாதம் நடத்தினர். இதனிடையே இன்று இறுதி கட்ட நேரடி விவாதம் நடைபெற்றது. இதில் உலகின் காற்று மாசுபாட்டுக்கு இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளே காரணம் என மீண்டும் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் 2 லட்சம் பேர் பலியாவார்கள்
இந்த விவாதத்தில் ஜோபிடன் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றுக்கு அமெரிக்காவில் இதுவரை 2,60,000 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 2 லட்சம் பேர் மரணிப்பார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கொரோனாவுடன் சாகப் பழகிவிட்டனர்
ஆனால் டொனால்ட் டிரம்ப்போ நிலைமை சரியாகி வருகிறது; மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டனர் என்கிறார். உண்மையில் அமெரிக்காவில் மக்கள் கொரோனாவுடன் சாவதற்குதான் பழகிவிட்டனர். மரணத்தை எதிர்கொள்கின்றனர்.
குடும்பங்களை பிரித்த கொடூரம்
எல்லை கடந்த குடும்பங்களிடம் இருந்து குழந்தைகளை பிரிக்கின்ற கொடூர சட்டத்தை நிறைவேற்றியவர் டிரம்ப். இது மிகப் பெரிய குற்றச்செயல். மாசுபாட்டை ஏற்படுத்துகிற எண்ணெய் தொழிலில் சீரமைப்புகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜோ பிடன் கூறினார்.