இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த வெப்பம்.. தகிக்கும் அண்டார்டிகா.. பனிப்பாறைகள் உருகும் அபாயம்
வாஷிங்டன்: அண்டார்டிகா முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பத்தால் தகித்து வருகிறது. அர்ஜென்டினா ஆராய்ச்சி நிலைய கணிப்புப்படி, அங்கே அதிகபட்சமாக இப்போது 18.3 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இது முந்தைய சாதனை அளவைவிட 0.8 செல்சியஸ் அதிகம்.
அண்டார்டிகா கண்டத்தின் தீபகற்பத்தின் வடக்கு முனையில் உள்ள எஸ்பெரான்சாவில் பதிவாகியுள்ளது இந்த வெப்ப நிலை. அண்டார்டிகாவின் முந்தைய அதிகபட்ச வெப்ப நிலை 17.5 செல்சியசாகும். 2015 மார்ச் மாதத்தில் இது பதிவானது.
அர்ஜென்டினாவின் வானிலை ஆய்வு நிறுவனம், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ட்வீட் மூலம், இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
மிக வேகம்
அண்டார்டிகாவில் தென் அமெரிக்காவை நோக்கிச் செல்லும் பகுதி பூமியில் மிக வேகமாக வெப்பமயமாகும் இடங்களில் ஒன்றாகும், இது கடந்த 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது என்று உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட இங்குள்ள அனைத்து பிராந்தியத்தின் பனிப்பாறைகளும் இதன் காரணமாக உருகும் அபாயம் உள்ளது.
சரிபார்ப்பு
வெலிங்டனின் விக்டோரியா பல்கலைக்கழகத்தின் பருவநிலை விஞ்ஞானி, பேராசிரியர் ஜேம்ஸ் ரென்விக், அண்டார்டிகாவில் முந்தைய வெப்ப பதிவுகளை சரிபார்த்துள்ள ஒரு தற்காலிக உலக வானிலை அமைப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தவர். அவர் இதுபற்றி கூறுகையில், "நிச்சயமாக இந்த பதிவு மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும், ஆனால் இது ஒரு சரியான பதிவாகத்தான் இருக்கும் வெப்பநிலை நிலையம் நன்கு பராமரிக்கப்படுகிறது." என்றார்.
5 வருடங்கள்தான்
"முந்தைய அதிகபட்ச வெப்பநிலை பதிவு வெளியாகி ஐந்து வருடங்களே ஆகின்றன, அதற்குள்ளாக கிட்டத்தட்ட ஒரு டிகிரி சென்டிகிரேட் வெப்பம் அதிகம் என்று தகவல் வெளியாகியுள்ளதால், இந்த தகவல் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது உலக சராசரியை விட மிக வேகமாக இருக்கும் வெப்பமயமாதலின் அறிகுறியாகும். ஒரு புதிய சாதனையை விரைவாக அடைந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்குத் தெரியும்? ஒருவேளை அது நீண்ட காலமாக இருக்காது. " இவ்வாறு அவர் கூறுகிறார்.
ஆய்வுகள்
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் பருவநிலை விஞ்ஞானி பேராசிரியர் நெரிலி ஆபிராம், அண்டார்டிகா தீபகற்பத்தின் வடக்கு முனையில் உள்ள ஜேம்ஸ் ரோஸ் தீவில் ஆராய்ச்சி மேற்கொண்டார். "இது மிக விரைவாக வெப்பமடையும் ஒரு பகுதி," என்று அவர் கூறியுள்ளார். இது எப்போதாவது ஒரு டி-ஷர்ட்டை அணிய போதுமான சூடாக இருக்கும் என்றும் வேடிக்கையாக ஒருமுறை அவர் குறிப்பிட்டார்.
பனிப்பாறைகள்
கடந்த 2000 ஆண்டுகளில் இப்பகுதியில் வெப்பமயமாதல் விகிதம் இந்த அளவுக்கு கூடியதாக பதிவுகள் இல்லை, என்று 2012 ஆம் ஆண்டின் முந்தைய ஆராய்ச்சி உறுதியிட்டு கூறுகிறது. ஆபிராம் மேலும் கூறுகையில் "வெப்பமயமாதலில் சிறிய அதிகரிப்பு கூட பனிப் பாறைகளை உருகுவதற்கான அபாயத்தை மிகவும் அதிகரிக்கும். " என்று எச்சரித்துள்ளார்.
சென்னைக்கு ஆபத்து
அண்டார்டிகாவில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை -89.2C ஆகும். பூமியில் எங்குமே இதுதான் குறைவான அளவு. ரஷ்ய வோஸ்டாக் ஆய்வு நிலையத்தில் இருந்தது, இந்த வெப்பநிலை 1983ம் ஆண்டு, ஜூலை 21ல் பதிவு செய்யப்பட்டது. பனிப்பாறைகள் உருகி, கடலில் கலந்தால், அது சென்னை, புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட கடலோர நகரங்களுக்குள் கடல் நீரை உட்புகும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.