நாஜி தாக்குதலுக்கு ஒப்பானது... நாடாளுமன்ற தாக்குதல் குறித்து விளாசும் அர்னால்ட்
வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் நாஜி தாக்குதலுக்கு ஒப்பானது என்று ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் விமர்சித்துள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, நாடாளுமன்ற கட்டடத்தில் முகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
அர்னால்ட் விமர்சனம்
உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே நடைபெற்ற இந்த வன்முறை உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வன்முறைச் சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்படி தற்போது பிரபல ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கண்டம் தெரிவித்துள்ளார்
நாஜி தாக்குதலுக்கு ஒப்பானது
இது தொடர்பாக ட்விட்டரில் அர்னால்ட் வெளியிட்டுள்ள வீடியோவில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ள வன்முறைச் சம்பவம் நாஜி தாக்குதலைப் போல இருந்தது என்று விமர்சித்துள்ளார். ஹிட்லரின் நாஜி படைகள் கடந்த 1938ஆம் ஆண்டு யூதர்களின் கடைகள் மீது வன்முறை தாக்குதல் நடத்தினர். அதேபோன்ற ஒரு வன்முறைச் சம்பவம் தான் தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடந்துள்ளதாக அர்னால்ட் கூறியுள்ளார்,
மோசமான நினைவு
மேலும் அவர் கூறுகையில், "யூதர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கேற்றதற்காக மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களைச் சுற்றியே நான் வளர்ந்தேன். என் தந்தை எப்போதும் குடித்துவிட்டு என் தாயை அடித்து துன்புறுத்துவார். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களாலேயே எனது சிறு வயது நினைவுகள் நிறைந்துள்ளது. நான் இது குறித்து இதுவரை வெளிப்படையாக பேசியதில்லை. ஏனென்றால் இவை அனைத்தும் எனது மோசமான நினைவுகள்" என்றும் அவர் குறிப்பிட்டார். ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் 1947ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் மீது தாக்கு
அமெரிக்க அதிபர் டிரம்ப் நியமான முறையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்ற முயல்கிறார் என்றும் தொடர்ச்சியான பொய்கள் மூலம் மக்களை அவர் தவறாக வழி நடத்துகிறார் என்றும் அர்னால்ட் கூறினார். டிரம்ப் ஒரு தலைவராகத் தோல்வியடைந்துவிட்டார் என்று விமர்சித்த அர்னால்ட், அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான அதிபர் டிரம்ப் என்றும் டிரம்பின் ட்விட்டர் கணக்கைப் போலவே டிரம்ப்பும் சிறிது நாட்களில் காணாமல் போகிவிடுவார் என்றும் கடுமையாக தாக்கி பேசினார். மேலும், புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைடனுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.