பற்றி எரிந்த அமெரிக்க நாடாளுமன்றம்.. அந்த நேரத்திலும் டிரம்ப் செஞ்ச செயல்.. எவ்வளவு கேவலம் தெரியுமா
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும் வன்முறை நடைபெற்றபோதும், அது குறித்து சற்றும் கவலைகொள்ளாமல் ஜோ பைடனின் வெற்றியைத் தாமதப்படுத்தும் முயற்சியில் டிரம்ப் ஈடுபட்டிருந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
அமெரிக்கா அதிபர் தேர்தல் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றனர்.
ஜோ பைடனை வெற்றியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள், பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு காவலர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்தனர்.
டிரம்ப் முயற்சி
அமெரிக்க நாடாளுமன்றமே பற்றி எரிந்து கொண்டிருந்த போதும், டிரம்ப் இது குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் பைடன் வெற்றியைத் தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. அதாவது நாடாளுமன்ற வன்முறை காரணமாக எம்பிகள் பாதுகாப்பான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போதும் குடியரசு கட்சி எம்பியை தொடர்பு கொண்டு நடைமுறைகளைத் தாமதப்படுத்துமாறு டிரம்ப் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மாறிய நம்பர்
இதற்காக அலபாமாவிலிருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுக் கட்சி எம்பி டாமி டூபர்வில்லேவுக்கு கால் செய்ய முயன்றுள்ளார். ஆனால் அதற்குப் பதிலாக உட்டா குடியரசுக் கட்சி எம்பி மைக் லீ என்பவருக்குக் கால் செய்துவிட்டார். டிரம்பின் அழைப்பை மைக் லீ ஏற்றபோது, தான் டூபர்வில்லேவுடன் பேச வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். இதையடுத்து மைக் லீ தனது மொபைலை டூபர்வில்லேவியிடம் கொடுத்துள்ளார். அப்போது தேர்தல் முடிவுகளை மாற்றுவது குறித்து இருவரும் சுமார் 10 நிமிடங்கள் விவாதித்துள்ளனர்.
மீண்டும் கால்
இந்நிலையில் இரவு ஏழு மணியளவில் டிரம்பின் வழக்கறிஞரிடம் இருந்து மற்றொரு கால் மைக் லீ தவறுதலாக வந்துள்ளார். அதுவும் டூபர்வில்லேவுக்காக செய்யப்பட்ட கால்தான். இருப்பினும், மைக் லீ இந்த அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து அவர் வாய்ஸ் மெசேஜை அனுப்பியுள்ளார். அதிலும் பைடனின் வெற்றியைத் தாமதப்படுத்துமாறு தான் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "பல்வேறு மாகாணங்களிலும் தேர்தல் முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டுங்கள். அதுவே நமக்கு இருக்கும் ஒரே வழி.
தோல்வி
இன்று நேரம் ஆகிவிட்டதால், இது குறித்த முடிவை நாளை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுங்கள். அப்போதுதான் நம்மால் எதாவது செய்ய முடியும்" என்று டிரம்ப்பின் வழக்கறிஞர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதையடுத்து டூபர்வில்லே உள்ளிட்ட சில குடியரசு கட்சி உறுப்பினர்கள் தேர்தல் முடிவு குறித்து ஆட்சேபனை தெரிவித்து, பைடன் வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றனர். இருப்பினும், இது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 93 பேர் பைடன் வெற்றிக்கு ஆதரவாகவும், 6 பேர் மட்டும் எதிராகவும் வாக்களித்தனர்.