அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடக்கம்
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி அஸ்ட்ராஜெனிகா மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடங்கியுள்ளது.
வாஷிங்டன் : ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசி அஸ்ட்ராஜெனிகா மருந்து பரிசோதனை அமெரிக்காவில் மீண்டும் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அளித்துள்ள ஒப்புதலை தொடர்ந்து அங்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனைகளில் பல்வேறு நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன.
கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகள் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றன. எந்த தடுப்பூசியும் இதுவரை சரியான தீர்வை தந்ததாக உலக சுகாதார மையம் உறுதி செய்யவில்லை. எனினும் அவசர கால பயன்பாட்டிற்காக பல்வேறு நாடுகள் கிடைக்கும் மருந்தை பயன்படுத்தி வருகின்றன.
தற்போதைய நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசி போன்றவை சோதனையில் முன்னணியில் உள்ளன. அமெரிக்காவின் ரெம்டெசிவிர் மருந்தும் சோதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மருந்து போதிய பலனை தரவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் தடுப்பு மருந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட நிறுவனங்களின் தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மத்தியில் தான் தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை கடந்த செப்டம்பர் மாதம் திடீரென நிறுத்தப்பட்டது. 3ஆம் கட்ட பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சோதனை நிறுத்தப்பட்டதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தெரிவித்தது. ஒரு வார காலத்திற்குப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.
தடுப்பூசியின் சோதனையில் கண்டறிய முடியாத பின்விளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்டதால் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் சோதனை உலகளாவிய அளவில் கடந்த மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், அமெரிக்காவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி சோதனை மீண்டும் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அளித்துள்ள ஒப்புதலை தொடர்ந்து அங்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி சோதனை மீண்டும் தொடங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.