ஜோ பிடனின் பிரசாரக்குழுவில் 3வது நபருக்கு கொரோனா.. பிரசாரத்தை ரத்து செய்த கமலா ஹாரிஸ்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுடன் செல்லும் தேர்தல் பிரச்சாரக்குழுவில் இதுவரை மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், திங்கள்கிழமை வரை மூன்று நாள் நேரடியான பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. கொரோனா என்ற மிகப்பெரிய தொற்றுக்கு நோய் மத்தியில் நடைபெற உள்ள இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அண்மையில் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த பிரசார பேரணியில் டிரம்ப் கலந்து கொண்டு பேசுகையில், அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான அதிபர் வேட்பாளர் என்றால் அது ஜோ பைடன் மட்டுமே. அவர் அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை நம்ப முடியவில்லை. அருவருப்பாகவும் அவமானகரமானதாகவும் உள்ளது. தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் நாட்டை அவர் வழி நடத்த மாட்டார். தீவிர இடதுசாரிகள் தான் நாட்டை வழி நடத்துவார்கள்.
சீனாவுக்கு வெற்றி
மேலும் ஜோ பிடன் வெற்றி பெற்றால் அது சீனாவின் வெற்றியாக அமையும். அமெரிக்காவின் மீதான சீனாவின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை தான் தடுத்து வருகிறேன். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன். இதன் காரணமாக நமது விவசாயிகளுக்கு உதவ முடிந்தது. ஆனால் இந்த தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றால் சீனா மீதான வர்த்தக வரிகளை அவர் நீக்கிவிடுவார் என்றார்.
முழுமையாக மாறும்
இதனிடையே ஜோ பிடன் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசும் போது, நான் ஆட்சிக்கு வந்தால், முதல், 30 நாட்களில் என்னென்ன செய்வோம் என, கேட்கிறார்கள். இந்த நாட்டுக்கு நிறைய செய்யவேண்டி உள்ளது. முதலில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் கவனம் செலுத்துவேன்.பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என பல பணிகள் உள்ளது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள, 1.1 கோடி பேருக்கு குடியுரிமை அளிப்பேன்.. கடந்த நான்கு ஆண்டுகளில், டிரம்பின் மோசமான நிர்வாகத்தால், இந்த நாடு மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது. அதையெல்லாம் சீர் செய்ய வேண்டும். சர்வதேச அளவில், அமெரிக்காவுக்கு இருந்த பெருமையை மீட்டெடுப்பேன். உலக நாடுகளை வழிநடத்திச் செல்லும் நாடாக, அமெரிக்காவை மீண்டும் மாற்றுவேன். இதையெல்லாம் வெறும் 30 நாட்களில் செய்ய முடியாது. அடுத்த, நான்கு ஆண்டுகளின் இறுதியில், இப்போதுள்ள அமெரிக்கா இருக்காது. அமெரிக்கா முழுமையாக மாறியிருக்கும்" என்றார்.
பிரச்சாரம் ரத்து
பிரச்சாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் ஜோ பிடனுடன் செல்லும் தேர்தல் பிரச்சாரக்குழுவில் இதுவரை மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிரச்சாரத்தை ரத்து செய்துள்ள துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், திங்கள்கிழமை வரை வெளியில் சொல்லப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.
பயணம் ரத்து
இதுபற்றி ஜோ பிடெனின் பிரச்சார மேலாளர் ஜென் ஓ'மல்லி தில்லன் கூறுகையில், பிடனுடனும், கமலா ஹாரிஸ் உடனும் தொடர்பில் இருந்தவர்களுடன் பணியாற்றிவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் சோதனை உறுதி செய்யப்பட்டவர்களுடனோ அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுடனோ கடந்த 48 மணி நேரமாக அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே சி.டி.சி வழிகாட்டுதலின் கீழ், வேட்பாளர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனினும் கமலா ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாஃப் தங்கள் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள்" என்று கூறினார்.
வெளிப்படையாக சொல்வேன்
கமலா ஹாரிஸ் இதுபற்றி கூறுகையில் நான் , எனக்கு நடத்தப்படும் எந்தவொரு கொரோனா பரிசோதனை முடிவுகளை பற்றியும் உங்களிடம் வெளிப்படையாக தெரிவிப்பேன். எனினும் மக்களே நீங்கள் முககவசம் அணிந்து கொள்ளுங்கள், சமூக தூரத்தை கடைப்பிடியுங்கள், உங்கள் கைகளை தவறாமல் கழுவுங்கள் இதுவே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் என்றார். ஜோ. பிடனுக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையில் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை என்பதால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.