நாங்கெல்லாம் அப்பவே அப்படி... இனவெறி விமர்சனத்தால்... நண்பரின் மூக்கை உடைத்த ஒபாமா
வாஷிங்டன்: பள்ளி காலத்தின் தன்னை இன ரீதியாக அவமதித்த நண்பரின் மூக்கை உடைத்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 44ஆவது அதிபராக இருந்தவர் ஒபாமா. அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான ஒபாமா, அந்நாட்டிலுள்ள இனவெறிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஸ்பாட்டிபையின் ரெனிகேட்ஸ் நேர்காணல் நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா தனது பள்ளி கால நிகழ்வு ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து ஒபாமா கூறுகையில், "நான் பள்ளியில் படிக்கும்போது, எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரும் நானும் இணைந்து கூடைப்பந்து விளையாடுவோம்.
ஒரு முறை, கூடைப்பந்து விளையாடியபோது, அவர் என்னை இன ரீதியில் திட்டும் ஒரு சொல்லைப் பயன்படுத்தினார். அந்த வார்த்தையின் பொருள் கூட அவருக்கு தெரியாது. ஆனால் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் என்னைக் காயப்படுத்த முடியும் என்று அவர் நினைத்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஒபாமா, "எனக்கு அந்த சம்பவம் இன்னும் நன்றாகவே நினைவு இருக்கிறது. அப்போது அவர் முகத்திலேயே ஒரு குத்து விட்டேன். இதனால் அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இந்தச் சம்பவம் எங்கள் லாக்கார் ரூமில் நடந்தது. இனி, ஒருபோதும் என்னை இப்படி அழைக்கக்கூடாது என்று நான் அவரை எச்சரித்தேன்" என்று கூறினார்.
அமெரிக்காவின் இன வெறி என்பது மிகப் பெரிய ஒரு பிரச்சினையாக உள்ளது. அடிமை முறைகள் ஒழிக்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆனாலும் கூட கறுப்பினத்தவர்களுக்கு எதிரான வன்முறையும் பாகுபாடுகளும் அங்குத் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
கடந்தாண்டு மே மாதம் அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர், அந்நகர போலீசாரால் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் கறுப்பினத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பிளாக் லைஃப்ஸை மேட்டர்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு போராட்டங்கள் தீவிரமடைந்தனர்.