ஒரு புறம் அதிகரிக்கும் மிரட்டல்.. மறுபுறம் அதிகமாகும் கொரோனா உயிரிழப்பு.. என்ன செய்ய போகிறார் பைடன்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து பைடன் பதவியேற்பு விழா குறித்த மிரட்டல்களும் இணையத்தில் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா காரணமாக அந்நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பைடன் வெற்றி பெற்றார். இருப்பினும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தல் முடிவுகளை மாற்ற தொடர்ந்து பொய்யான கருத்துகளைப் பரப்பி வந்தார். இதற்காகப் பல முயற்சிகளையும் எடுத்தார். இருப்பினும், எதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இறுதி முயற்சியாக பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வின்போது அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இரு காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம் ஏற்பட்ட ஜனவரி 6ஆம் தேதி அந்நாட்டில் கறுப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் மிரட்டல்
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் கலவரம் ஏற்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன் வரை, இணையத்தில் டிரம்பை மிரட்டும் பல செய்திகள் பகிரப்பட்டது. TheDonald.win என்ற டிரம்பின் ஆதரவாளர்கள் பக்கத்தில் பலரும் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைப் பதிவிட்டனர். அவ்வாறு வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டவர்கள் மீது அமெரிக்காவின் எப்.ஃபி.ஐ. தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கண்டறிவது கடினம்
வழக்கமாக இதுபோல இணையத்தில் கூறப்படும் மிரட்டல்களை எஃப்.பி.ஐ. அமைப்பு பெரியளவில் கண்டுகொள்ளாது. இருப்பினும், அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்திற்குப் பின் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் எந்த மிரட்டலையும் சாதாரணமாக விடுவதாக இல்லை. அனைத்து குறித்தும் தீவிரமாக விசாரணை செய்கின்றனர். இதுபோன்ற மிரட்டல்களில் எவை உண்மையானவை எவை போலியானவை என்பதைக் கண்டறிவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக எஃப்.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இணையப் பக்கங்கள் முடக்கம்
அமெரிக்கக் கலவரத்திற்குப் பின்னர் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் தளங்களில் உள்ள வன்முறை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கி வருகின்றனர். டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் வன்முறையைத் தூண்டும் வகையிலுள்ள பல்வேறு கணக்குகளை நிரந்தரமாக முடக்குவதாக அறிவித்தன. அதேபோல, வன்முறையைத் தூண்டும் வகையிலுள்ள சில இணையதளங்களும் முற்றிலுமாக முடக்கப்பட்டன.
சரியான அணுகுமுறை இல்லை
இருப்பினும், இதுபோல வன்முறையைத் தூண்டும் இணையதளங்களையும் பக்கங்களையும் முழுமையாக முடக்குவது என்பது சரியான அணுகுமுறை இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோல பொதுவெளியில் மிரட்டல்களை விடுப்பவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பக்கங்களை முடக்கினால், டெலிகிராம், மீவி போல டிராக் செய்யக் கடினமான தளங்களுக்கு வன்முறையாளர்கள் சென்றுவிடுவார்கள் என்றும் பாதுகாப்புத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்
இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில் கொண்டே தற்போது பைடன் பதவியேற்பு விழாவுக்குப் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைநகர் வாஷிங்டனில் வரும் ஜனவரி 21ஆம் தேதி வரை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஹோட்டல்களிலும் வெளிமாநில ஆட்கள் தங்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விமான நிறுவனங்களும் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கொரோனா பாதிப்பு
இந்தப் பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் கொரோனா காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 3,805 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதேபோல சுமார் 2.48 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் தோல்வி
இந்நிலையில், டிரம்ப் நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தோல்வியடைந்துவிட்டதாக ஜோ பைடன் விமர்சித்துள்ளார். மேலும், பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தைப் பயன்படுத்தி சிரஞ்ச் மற்றும் தடுப்பூசி செலுத்தத் தேவையான பொருள்களில் உற்பத்தியையும் அதிகரிக்க ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான நிறுவனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சியினர் கூறியுள்ளனர்.
10 கோடி பேருக்கு தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்துப் பேசிய பைடன்,"அமெரிக்க மக்களைக் காப்பற்ற தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பதவியேற்ற முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படும்.
100 தடுப்பூசி மையங்கள்
குறைந்த வருமானம் உடைய மாகாணங்கள் தடுப்பூசி செலுத்து போதிய இடங்களும் மருத்துவமனைகளும் இல்லை. இதனால் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாகாணத்திலும் அவசரச் சட்டத்தின் கீழ் கூடுதலாக 100 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் ஏற்படுத்தப்படும். இதுபோல பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும்கூட, வைரஸ் பரவல் முற்றிலுமாக கட்டுக்குள் வர சில காலம் ஆகும்" என்றார். முன்னதாக, தடுப்பூசி குறித்து நம்பிக்கையை அதிகரிக்க ஜோ பைடன் மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.