சர்வதேச தூதரகத்தில் கொலை.. முதல் வாரத்திலேயே ரகசிய ஆவணத்தை வெளியிடும் பைடன் அரசு.. பதற்றத்தில் சவுதி
வாஷிங்டன்: செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான அமெரிக்காவின் ரகசிய அறிக்கை பொதுவெளியில் விடப்படும் என்று அந்நாட்டின் உளவுத் துறை இயக்குநராகப் பதவியேற்கவுள்ள அவ்ரில் ஹைன்ஸ் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். அவருடன் அந்நாட்டின் முதல் பெண் அதிபராகக் கமலா ஹாரிஸ் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் டிரம்ப் பங்கேற்கவில்லை.
பைடன் பதவியேற்றதைத் தொடர்ந்து, வரும் நாட்களில், முக்கிய பதவிகளில் அவர் பரிந்துரைத்த நபர்கள் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அமெரிக்காவின் முதல் பெண் உளவுத் துறை இயக்குநராக அவ்ரில் ஹைன்ஸ் விரைவில் பதவியேற்கவுள்ளார்.
முக்கிய ஆவணம்
இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் செய்தியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான அமெரிக்காவின் ரகசிய அறிக்கை பொதுவெளியில் விடப்படும் என்று அவர் கூறியுள்ளார். உளவுத் துறை இயக்குநராக அவ்ரில் ஹைன்ஸ் பதவியேற்று சில நாட்களில் இந்த முக்கிய ஆவணம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆவணம் வெளியாகும்பட்சத்தில் அது சவுதிக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே பெரும் பிளவைக் கூட உருவாக்கலாம்.
யார் இந்த ஜமால் கஷோகி
ஜமால் கஷோகி முதலில் சவுதி அரசு குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தவர். பின்னர், அவர் திடீரென்று சவுதி அரசு குடும்பம் குறித்தும் அந்நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் குறித்தும் விமர்சிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் வசித்து வந்த இவர், வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்தில் செய்தியாளராகவும் பணிபுரிந்தார். இந்நிலையில், ஜமால் கஷோகி கடந்த 2018ஆம் ஆண்டு துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் கொலை செய்யப்பட்டார்.
சவுதி அரசு மறுப்பு
சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தூண்டுதலின் பெயரிலேயே இந்த கொலை நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் இதை முற்றிலுமாக மறுத்துள்ள சவுதி அரசு, இந்தக் கொலைக்கும் முகமது பின் சல்மானுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியது. மேலும், இந்தக் கொலை தொடர்பாகத் தூதரகத்தில் பணிபுந்தவர்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசு தெரிவித்துள்ளது.
டிரம்ப் அரசு
சர்வதேச தூதரகத்தில் வைத்து முக்கிய செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கொலை தொடர்பாக அமெரிக்க ரகசிய அறிக்கை தயார் செய்து இருந்தது. இந்த அறிக்கையைப் பொதுவெளிக்கு வெளியிட வேண்டும் என்று டிரம்ப் அரசுக்கு அந்நாட்டு எம்பிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், டிரம்ப் அரசு இந்த கோரிக்கையை மறுத்துவிட்டனர்.
பெரும் தலைவலி
இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது உளவுத் துறை இயக்குநராகும் அவ்ரில் ஹைன்ஸ் இந்தக் கொலை தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார். இது வெளியாகும்பட்சத்தில் சவுதிக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தும். ஏற்கனவே மோசமான பொருளாதாரம் மற்றும் அரசு குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் ஆகியவற்றால் இளவரசர் முகமது பின் சல்மானின் பெயர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரகசிய ஆவணமும் வெளியானால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.