டிரம்ப் தோல்வியை ஏற்காவிட்டால்.. இன்னும் நிறைய பேர் இறந்து போவார்கள்.. பிடன் எச்சரிக்கை
வாஷிங்டன்: 2020 அதிபர் தேர்தலின் முடிவை ஏற்க டொனால்ட் டிரம்ப் மறுத்தால், கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்கு விரைவாக விநியோகிக்க விரும்பும் வருங்கால அமெரிக்க அரசின் நிர்வாக திறனை பாதிக்கும் என்று அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற ஜோ பிடன் எச்சரித்தார்.
டெலாவேரில் தொழிலாளர் மற்றும் வணிக தலைவர்களை சந்தித்து பொருளாதாரம் குறித்து உரை நிகழ்த்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் ஜோ பிடன் பேசுகையில், நாங்கள் கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்து பணிகளை ஒருங்கிணைக்காவிட்டால் அதிகமான மக்கள் இறக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம் என்ற யதார்த்தத்தை டிரம்ப் ஏற்க மறுத்துள்ள நிலையில் பிடனிடம் இப்படி ஒரு கருத்து வந்துள்ளது. டிரம்பால் நியமிக்கப்பட்ட பொதுச் சேவை நிர்வாகி, பிடனின் புதிய அரசுக்கு இடைநிலை செயல்முறையைத் தொடங்க சட்டப்பூர்வமாக தேவையான நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார். இதனால் பிடனின் குழுவுக்கு பட்ஜெட், உளவுத்துறை விளக்கங்கள் மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் கூட்டாட்சி அமைப்புகளுக்கான அணுகல் கிடைக்காது.
இதனால் அதிருப்தி அடைந்த பிடன், ஒருங்கிணைப்பு முக்கியமானது . அப்போது தான் விரைவாக செயல்பட முடியும். இதில் அதிபர் தலையிட்டால் மிகவும் எளிதாகிவிடும். ஜனவரி 20 ஆம் தேதிக்கு வருவதற்கு முன்னர் அதிபர் டிரம்ப் சற்று ஞானம் பெறுவார் என்று நான் நம்புகிறேன்.
குளிர்காலத்தில் கொரோனா தொற்றுநோய்கள் பரவி வருவதால், வணிக நிறுவனங்களுக்கும், வேலையில்லாத அமெரிக்கர்களுக்கும் உதவுதற்கான பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற டிரம்ப் தவறிவிட்டார். அதிபர் டிரம்ப் இன்னும் கோல்ஃப் விளையாடுகிறார், அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை, ஏன் இப்படி செய்கிறார் என எனக்கு புரியவில்லை" என்றார்.
அமெரிக்காவின் மாடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி 94.5% பயனுள்ளதாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பிடன் இப்படி கடுமையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடிமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்ட வட டகோட்டா மாகாண ஆளுநர் டக் பர்கம், உட்டா மாகாணா ஆளுநர் கேரி ஹெர்பர்ட் மற்றும் ஓஹியோவின் மைக் டிவைன் ஆகிய குடியரசுக்கட்சி ஆளுநர்களை பிடன் வெகுவாக பாராட்டினார்.