அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி.. சேவை செய்ய பாலினம் தடை இல்ல.. அதிரடி காட்டும் பைடன்
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் ஆண், பெண்களைப் போலவே திருநங்கைகளும் நாட்டுக்காகச் சேவை செய்ய அனுமதிக்கும் புதிய உத்தரவை அதிபர் பைடன் பிறப்பிக்கவுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நான்கு ஆண்டுகளாகக் குடியரசு கட்சியின் டிரம்ப் அதிபராக இருந்தார். தீவிர வலதுசாரியும் பிற்போக்குவாதியுமான டிரம்ப், அவரது காலத்தில் பல்வேறு பிற்போக்குத்தனமான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். இதற்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்த போதும் டிரம்ப், அதை மாற்ற தயாராக இல்லை.
இந்நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்பை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். அதைத்தொடர்ந்து, அந்நாட்டின் 46ஆவது அதிபராகக் கடந்த வாரம் ஜோ பைடன் பதவியேற்றார்.
டிரம்ப் உத்தரவுகளை ரத்து செய்யும் பைடன்
அதிபராகப் பதவியேற்ற முதலே டிரம்பின் பல உத்தரவுகளை பைடன் ரத்து செய்து வருகிறார். உலக சுகாதார அமைப்பு மற்றும் பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்று அறிவித்தார். மேலும், இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையையும், மெக்ஸிகோ சுவர் கட்டுமானத்திற்கும் தடை விதித்து அதிரடி காட்டினார்.
ராணுவத்தில் திருநங்கைகள்
இந்நிலையில், பைடன் அரசு முதல் வாரத்திலேயே மற்றுமொரு சாதனையைப் படைக்கவுள்ளது. அதிபராக டிரம்ப் இருந்தபோது, திருநங்கைகள் ராணுவத்தில் பணிபுரிய தடை விதித்திருந்தார். அந்த உத்தரவு ரத்து செய்து அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளும் நாட்டுக்காகச் சேவை செய்ய அனுமதிக்கும் புதிய உத்தரவை அதிபர் பைடன் இன்று பிறப்பிக்கவுள்ளார். இதுகுறித்து பைடனின் பாதுகாப்பு செயலர் ஜெனரல் லாயிட் ஆஸ்டின் கூறுகையில், "நான் அதிபரின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறேன். உடல் மற்றும் மன ரீதியாக ஃபிட்டாக இருக்கும் அனைவரும் ராணுவத்தில் பணிபுரியலாம்" என்றார்.
ஒபாமா காலம்
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பணிபுரியப் பல ஆண்டுகளாகவே தடை விதிக்கப்பட்டிருந்தது. பணியில் இருப்பவர்கள் திருநங்கைகள் என்று கண்டறியப்பட்டால் அவர்கள், பணியிலிருந்து விலக்கப்படுவார்கள். ஆனால், இந்தத் தடை உத்தரவு ஒபாமா காலத்தில் மாற்றியமைக்கப்பட்டது. திருநங்கைகள் வெளிப்படையாகவே பணிபுரியலாம் என்றும் ஆண், பெண் போல திருநங்கைகளும் தனி பாலினமாக 2017, ஜூன் 1 முதல் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
டிரம்ப் போட்ட தடை
ஆனால், அதன் பின்னர் அதிபரான டிரம்ப், திருநங்கைகளை ராணுவத்தில் சேர்த்தால் செலவுகள் அதிகரிக்கும் என்று கூறி, இந்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், ஏற்கனவே, ராணுவத்தில் இருக்கும் திருநங்கைகள் தங்கள் பிறந்த பாலினத்திற்கு மாற சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே ராணுவத்தில் பணிபுரிய அனுமதி அளிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. மேலும், புதிதாகத் திருநங்கைகள் ராணுவத்தில் சேரவும் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவைத்தான் தற்போது ஜோ பைடன் ரத்து செய்துள்ளார்