டிரம்ப் மாதிரி இல்லை.. கொரோனா விஷயத்தில் பிடன் தீவிரம்.. தென்னாப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு தடை
வாஷிங்டன்: உருமாறிய கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த வாரம், சனிக்கிழமை முதல் தென்னாப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கரல்லாத குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அதிபர் ஜோ பிடன் தடை விதிக்க உள்ளார் என்று அமெரிக்காவின் மூத்த பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று திங்கள்கிழமை மதுல் பிரேசில், யூகே, அயர்லாந்து மற்றும் ஐரோப்பாவின் 26 நாடுகளின் பயணிகளுக்கு நுழைவுத் தடையை மீண்டும் விதிக்கிறது ஜோ பிடன் நிர்வாகம்.
"தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா பரவியுள்ளதால், நாங்கள் தென்னாப்பிரிக்காவை தடைசெய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கிறோம்" என்று முதன்மை துணை இயக்குனர் டாக்டர் அன்னே சுச்சாட் தெரிவித்தார்.
"அமெரிக்கர்களைப் பாதுகாப்பதற்கான இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, உருமாறிய கொரோனா தற்போதைய தொற்றுநோயை மேலும் வேகமாக பரப்பி மோசமாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது" என்று அவர் கூறினார்.
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி 18ல், பிரேசில் மற்றும் ஐரோப்பா மீதான கட்டுப்பாடுகள், செவ்வாய்க்கிழமை முதல் நீக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், பிடன் நிர்வாகம், அந்த கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது.
கடந்த வாரம், புதன்கிழமை பதவியேற்ற பிடன், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.