ஓகே.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. பிடனுக்கு ஒத்துழைப்பு வழங்க டிரம்ப் உத்தரவு!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அமெரிக்க அரசின் பொது சேவைகள் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக ஒப்பு கொண்டதை அடுத்து ஜோ பிடனின் புதிய அரசு அமைவதற்கான ஒத்துழைப்பை வழங்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கி வந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் அதிபர் டிரம்பை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளியில் வந்த தமிழ்ப் பெண் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.
தற்போதைய அதிபர் டிரம்பால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. என்னென்னவோ செய்து பார்த்தார். சட்ட போராட்டம் நடத்தியும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் தற்போது ஜோ பிடன் வெற்றியை முழுமையாக ஏற்க அவர் முடிவு செய்துள்ளார். புதிய அரசு அமைய ஒத்துழைக்குமாறு அவர் தனது சட்ட அணியினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், .ஆரம்ப நெறிமுறைகள் தொடர்பாக பொது சேவைகள் நிர்வாகத் தலைவர் எமிலி மர்பியும், அவரது குழுவும் செய்ய வேண்டியதைச் செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன், அதையே செய்யும்படி எனது அணியிடமும் கூறியுள்ளேன் என்றார் .
இதனை தொடர்ந்து பொது சேவைகள் நிர்வாகத் தலைவர் எமிலி மர்பி, ஜோபிடன்க்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக பிடன் நிர்வாகம் அமைவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. முறையான நிர்வாக மாற்றத்திற்கு புதிய அதிபர் தலைமையிலான நிர்வாகம் தயாராக தொடங்கியுள்ளது.
பொது சேவைகள் நிர்வாகத்தின் அறிவிப்பு தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் நமது பொருளாதாரம் மீண்டும் பாதையில் செல்வதற்கும்" தேவையான முதல் படி" என்று பிடன்-ஹாரிஸ் மாற்ற செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குனர் யோகன்னஸ் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
2020-ஐ கலக்கிய புரிந்த கமலா ஹாரீஸ்.. இந்தியாவுக்கு பெருமை.. அமெரிக்காவில் புதுமை #Newsmakers2020
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன் ஜோ பிடன் நிர்வாகம் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக கொரோனா வைரஸ் பணிக்குழுவை ஒருங்கிணைப்பது மற்றும் பொது சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பது உள்ளிட்ட செயல்களை முன்னெடுத்தது.
இந்த நிலையில் ஜோபிடன் நிர்வாகம் அமைவதற்கான அதிகாரப்பூர்வ பணிகள் தொடங்கியுள்ளன. பிடனும் தனது அமைச்சரவையை முடிவு செய்ய ஆரம்பித்துள்ளார்.