பொருளாதார கமிட்டி தலைவராக இந்திய வம்சாவளி பெண் நீரா டாண்டன் நியமனத்தை வாபஸ் பெற்றார் ஜோ பைடன்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை பிரிவின் இயக்குநராக(பொருளாதார கமிட்டி தலைவர்) இந்திய வம்சாவளி நீரா டாண்டனின் நியமனத்தை ஜோ பைடன் வாபஸ் பெற்றுள்ளார்.
நீரா டாண்டனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனநாயக அதிபர்கள் பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமாவின் நிர்வாகங்களில் திறம்பட பணியாற்றியவர் நீரா டாண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் பைடன்
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முன்னாள் அதிபர் டிரம்ப் முடக்கி வைத்துள்ள திட்டங்களுக்கு உயிர் கொடுத்து அதனை மறுசீரமைப்பு செய்து வருகிறார். குறிப்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறார்.
முக்கிய பொறுப்பில் இந்திய பெண்
கொரோனாவால் அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிப்பட்ட நிலையில் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை மீண்டு ஏழச் செய்வதற்காக பொருளாதார குழு ஒன்றை அமைக்க முடிவு செய்தார். இதில் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை பிரிவின் இயக்குநராக(பொருளாதார கமிட்டி தலைவர்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் என்பவரை நியமிக்க பைடன் முடிவு செய்தார்.
நீரா டாண்டனுக்கு வலுத்த எதிர்ப்புகள்
ஜோ பைடன் இந்த பரிந்துரையை கூறியவுடன் பலரும் நீரா டாண்டனுக்கு எதிராக திரண்டனர். ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ மான்சின் என்ற செனட் எம்பி.யே டாண்டன் நியமனத்தை எதிர்த்து வாக்களிக்க போவதாக தெரிவித்தார். இதே போல் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சூசன் கொலின்ஸ், மிட் ரூம்னி, ராப் போர்ட்மேனும் அவருக்கு எதிர்த்து வாக்களிப்பதாக கூறியுள்ளனர்.
வாபஸ் பெற்றார் பைடன்
நீரா டாண்டன் செனட் எம்பி.க்களை கடந்த காலங்களில் சமூக வலைதளங்களில் விமர்சித்து இருந்ததே இதற்கு காரணம். இந்த நிலையில் எதிர்ப்புகள் தொடர்ந்து வந்ததால் நீரா டாண்டனின் நியமனத்தை வாபஸ் பெறுவதாக அதிபர் ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சிறிய அறிக்கையில், 'மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலக இயக்குநருக்கான வேட்புமனுவிலிருந்து தனது பெயரைத் திரும்பப் பெற நீரா டாண்டனின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டேன்" என்று கூறியுள்ளார். முன்னாள் ஜனநாயக அதிபர்கள் பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமாவின் நிர்வாகங்களில் பணியாற்றிய நீரா டாண்டன் தற்போது அமெரிக்க முன்னேற்றத்திற்கான தாராளவாத மையத்தை நடத்தி வருகிறார்.