2015ம் ஆண்டிலேயே எச்சரித்தார்.. இன்று நடந்தே விட்டது.. கொரோனாவை எதிர்கொள்வது பற்றி பில்கேட்ஸ் பேட்டி
வாஷிங்டன்: மற்றொரு தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு இந்த உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று, 2015 ஆம் ஆண்டில் தெரிவித்தார் உலகின் பெரிய பணக்காரரும், மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ்.
எந்த நாடும் அதை செவி கொடுத்தும் கேட்கவில்லை. இப்போது கொரோனா வைரஸ் பரவலால், உலக நாடுகள் தத்தளித்து வரும் நிலையில், அவரது பழைய பேச்சு வீடியோ வைரலாக சுற்றி வருகிறது.
இந்த நிலையில்தான், டெட் என்ற ஊடகம் அவரை தொடர்பு கொண்டு இந்த வைரஸ் தாக்குதல் பற்றி கலந்துரையாடியது. இந்த கலந்துரையாடலில் பில்கேட்ஸ் கூறுகையில், எபோலா ஒரு மோசமான நோய்தான். ஆனால் அது தாக்கியதுமே, தாக்கப்பட்டவர் கடுமையான உடல் உபாதைகளால் வெளியே எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி போவார்.
அவர் எந்த ஒரு தேவாலயத்திற்கும் செல்ல முடியாது. பஸ்சில் பயணிக்க முடியாது. கடைக்கும் போய் இருக்கமாட்டார். நேரடியாக அவருக்கு சிகிச்சை அளிப்பது மட்டும்தான் பாக்கி. ஆனால் ஃப்ளூ போன்ற தொற்றுநோய்கள் ஆபத்தானவை. இவை லேசான காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகளை மட்டும் தான் முதலில் காட்டும்.
நோய்வாய்ப்பட்டவர், பிரச்சனை பற்றி தெரியாமல் தனது வழக்கமான பணிகளை செய்து வருவார். பல நபர்களுடன் அவர் தொடர்பில் இருப்பார். எனவேதான் மனிதரிடமிருந்து மனிதருக்கு செல்லக்கூடிய தொற்றுநோய்கள், மற்றும் வைரஸ்கள் மிக ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.
இது மிக மோசமான ஒரு பாதிப்பு. இப்போதைய காலகட்டத்தில் மக்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வது வழக்கம் ஆகி விட்டது. இதனால் ஒரு இடத்தில் உள்ள பிரச்சினை எல்லா நாடுகளுக்கும் பரவி விடுகிறது. இந்த வைரஸ் விவகாரம் ஜனவரி மாதம் வெளியில் வந்தபோதே, இதை அவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்த முடியாது என்றுதான் நான் நினைத்திருந்தேன். இவ்வாறு தனது பேட்டியின் போது பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார் பில்கேட்ஸ். அந்த வீடியோவை நீங்கள் இங்கு பார்க்கலாம்.
பில்கேட்ஸ் கொரோனா தடுப்புக்கு ரூ.715 கோடியை ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.