சரக்குகளுடன் சர்வதேச விண்வெளிக்கு சென்ற கல்பனா சாவ்லாவின் விண்கலம்
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம் அன்டரேஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன.
அமெரிக்காவின் நார்த்ரூப் கிரம்மான் நிறுவனத்தின் சிக்னஸ் விண்கலத்தை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டது.
பாதுகாப்பு
இந்த விண்கலத்தை வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தும் பணி தொடங்கியது. வெர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரம்மாவின் அன்டரோஸ் ராக்கெட், விண்கலத்தை சுமந்து கொண்டு இரவு 9.39 மணிக்கு புறப்படத் தயாரானது.
கோளாறு
ஆனால் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு விண்கலம் ஏவப்பட்டது.
விண்வெளி நிலையம்
9 நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்து விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. திங்கள்கிழமை காலை விண்வெளி நிலையத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலத்தால் 3,630 கிலோ பொருள்களை சுமந்து சென்று விண்வெளி நிலையத்தில் டெலிவரி செய்யும்.
கம்ப்யூட்டர் சாதனங்கள்
விண்வெளியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறை, விர்ச்சுவல் 3டி கேமரா, கம்ப்யூட்டர் சாதனங்கள், பரிசோதனைக் கருவிகள் என 6000 பவுண்டுகள் எடை உள்ள பொருட்கள் இந்த விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது சர்வதேச விண்வெளியில் உள்ள கழிப்பறையை விட இந்த விண்கலத்தில் உள்ள கழிப்பறை 40 சதவீதம் இலகுவானது. இந்த விண்கலம் மீண்டும் டிசம்பர் மாதம் பூமிக்கு திரும்பும்.