அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை தலைவராக சென்னையை சேர்ந்த பிரமிளா ஜெயபால் தேர்வு!
வாஷிங்டன்: அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்றுள்ளார்.
அமெரிக்காவின் பாராளுமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன. செனட் சபை (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரண்டு மன்றங்களாக செயல்படுகின்றன. இந்த நிலையில், பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படும் கீழவையின் இடைக்காலத் தலைவராக பிரமிளா ஜெயபால் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த பொறுப்பை ஏற்கும் முதல் தெற்காசிய பெண் என்பதுடன், அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழவைக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய பெண் எம்பி என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். இவர் சென்னையை பூர்விகமாக கொண்டவர்.
இந்தோனேஷியா மற்றும் சிங்கப்பூரில் பள்ளிப்படிப்புகளை முடித்த இவர், 1982ம் ஆண்டு தனது 16வது வயதில் அமெரிக்காவில் குடியேறினார். வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடிந்த பிரமிளா, அங்குள்ள நார்த்வெஸ்ட் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பை முடித்தவர். அதன்பிறகு குடியுரிமை ஆலோசனை மையத்தையும் நடத்தி வந்தார்.
அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கும் இவர், அரசியலில் களம் புகுந்தார். கடந்த 2015ம் ஆண்டு ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஜனநாயக கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராக உருவெடுத்துள்ள பிரமிளா தற்போது அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழவை தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
இதுகுறித்து பிரமிளா ஜெயபால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது," அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் இடைக்கால தலைவராக பொறுப்பு ஏற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பதவியில் அமரும் முதல் ஆசிய பெண் என்பதும் எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. இது பெருமைக்குரியதாக கருதுகிறேன். நம் நாட்டு வரலாற்றில் மிகவும் மதிப்புவாய்ந்த இந்த பொறுப்பை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறி இருக்கிறார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபைக்கான தலைவர் பதவியானது பெரும்பான்மை உள்ள கட்சியின் உறுப்பினர்கள் அடிப்படையில் அவ்வப்போது தேர்வு செய்யப்பட்டு இடைக்கால தலைவராக பொறுப்பு வகிப்பது வழக்கம். பிரமிளாவுக்கு முன்னதாக நான்சி பெலோசி என்பவர் கடந்த ஜனவரியில் இருந்து இடைக்கால தலைவராக பொறுப்பு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.