இந்திய எல்லையில் சீனா 60,000 வீரர்கள் குவிப்பு.. அமெரிக்க உதவியை கேட்கிறது இந்தியா- மைக் பாம்பியோ
வாஷிங்டன்: இந்தியா-சீனா இடையேயான உண்மை எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே, (LAC) சீனா 60 ஆயிரம் படை வீரர்களை குவித்து வைத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உதவியை இந்தியா நாடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
குவாட் குரூப் என்று அழைக்கப்படும், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது.
கொரோனா பிரச்சினைக்கு பிறகு இதுதான், இவர்கள் சந்திக்கும் முதல் கூட்டம். சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்புக்கு இடையே இக்கூட்டம் நடந்தது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதில் மைக் பாம்பியோவும் பங்கேற்றார்.
இந்தியா வருகிறார் அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் பீகன்
பெரிய நாடுகள்
அமெரிக்கா திரும்பியுள்ள பாம்பியோ, நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனா 60 ஆயிரம் படை வீரர்களை குவித்து வைத்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்களை நான் சந்தித்து பேசினேன். இந்த நான்கு நாடுகளுமே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். முக்கியமான பொருளாதார வலிமையுள்ள நாடுகள். ஆனால் இவை அனைத்துக்குமே, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியால் அச்சுறுத்தல் உள்ளது.
அமெரிக்க அரசுகள் தூங்கின
இந்த நாடுகள் தங்கள் உள்நாட்டுக்குள்ளும் அச்சுறுத்தல் இருப்பதாகவே கருதுகிறார்கள். நீண்ட காலமாகவே, நாம் அனைவரும், தூங்கிவிட்டோம். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி நம்மீது ஆதிக்கம் செலுத்த மேற்கு நாடுகளும் அனுமதித்துவிட்டன. இந்த அதிருப்தி மீட்டிங்கில் பங்கேற்ற அனைத்து நாடுகளுக்கும் இருந்தது. அமெரிக்காவின் முந்தைய அரசுகள், சீனாவிடம் மண்டியிட்டன. நமது அறிவுசார் சொத்துரிமைகளை சீனா களவாட அனுமதித்தன. இதனால் பல லட்சம் வேலை வாய்ப்புகளையும் சீனா அபகரித்தது. இந்தியா உள்ளிட்ட குவாட் நாடுகளும் இதே புகாரைத் தான் கூறுகின்றன.
ஆஸ்திரேலியாவை மிரட்டும் சீனா
இந்த போராட்டத்தில், அமெரிக்கா அவர்களின் தோழமை நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இமயமலையில் சீனர்களுடன் இந்தியா நேரடியாக மோதும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சீனர்கள் இப்போது வடக்கில் இந்தியாவுக்கு எதிராக பெரும் படைகளைத் திரட்டத் தொடங்கியுள்ளனர். சீனர்கள் கொரோனா வைரசை பரப்பி விட்டார்கள் என்று ஆஸ்திரேலியா குற்றம்சாட்டியது.
கொரோனா விவகாரத்தில், என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள விரும்புகிறோம், நாம் ஒரு முழு விசாரணையை நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா கூறியது. இதனால் சீனா கோபமடைந்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆஸ்திரேலியாவுக்கு மிரட்டல் விடுக்கிறது. ஆஸ்திரேலியர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்.
உலகம் விழித்தது
இந்த நாடுகள் அனைத்துமே, சீன கம்யூனிஸ்ட் கட்சி தங்களுக்கு பெரும் ஆபத்து என்பதை உணர்ந்துள்ளன. உலகம் விழித்துக் கொண்டது. அலை மாற்றி சுழல ஆரம்பித்துள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், தனது பங்காளிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி, இந்த ஆபத்தை அகற்றும். சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவோம். சீனாவை பின்னுக்கு தள்ள எந்த நாடுகள் முன்வருகிறதோ அவற்றுடன் அமெரிக்கா கை கோர்க்கும். சீன கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கிளம்பியுள்ள, அபாயத்திலிருந்து அமெரிக்க மக்களை காப்பாற்றுவது எங்கள் இலக்கு. இவ்வாறு மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.