டிக்டாக், வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை.. சீனா கடும் கண்டனம்
வாஷிங்டன்: டிக் டாக், வீ சாட் ஆகிய செயலிகளுக்கு இந்தியாவை போல அமெரிக்காவிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய சீன எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் இரு தரப்பு ராணுவத்தினர் இடையே கடந்த ஜூன் மாதம் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து சீன பொருள்களுக்கு தடை விதிக்கக் கோரி இந்தியாவில் போராட்டம் வலுத்தது.
இந்த நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்டாக் உள்பட சீனாவின் 106 செயலிகளுக்கு இந்தியா கடந்த ஜூலை மாதம் தடை விதித்தது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு வரவேற்றது.
50 வீரர்கள் உள்ளே இருப்பார்கள்.. பாங்காங் திசோவில் சீனா வைக்கும் பகீர் கோரிக்கை.. மறுத்த இந்தியா!
அமெரிக்கா
இதே போன்ற ஒரு கோரிக்கை அமெரிக்காவிலும் எழுந்தது. அங்கு செயல்பட்டு வந்த டிக்டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அந்த இரு செயலிகளும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி அந்த செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.
பைட்டான்ஸ் நிறுவனம்
இதற்கான உத்தரவு கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு 45 நாளில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இதனிடையே பைட்டான்ஸ் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும் என டிரம்ப் கெடு விதித்திருந்தார்.
டிரம்ப்
இந்த கெடு முடிவடைந்த நிலையில் அந்த இரு செயலிகளுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆணையை அமெரிக்க வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் அதிருப்தியில் இருப்பதாக பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் சந்தேகங்களை கருத்தில் கொண்டு இதுவரை இல்லாத அளவு கூடுதல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனங்கள்
அதே போல் வீ சாட் செயலியின் டென்சன்ட் நிறுவனமும் இந்த தடையை துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த தடை உத்தரவுக்கு டிரம்பிற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும் சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சீனா கண்டன அறிக்கை
இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் , எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் தேவையற்ற காரணங்களுக்காக சீனாவின் இரு நிறுவனங்களையும் தடை செய்ய அமெரிக்கா தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது. இது அந்த நிறுவனங்களின் இயல்பான வணிக நடவடிக்கைகளை கடுமையாக பாதித்தது. அமெரிக்கா இது போன்ற செயல்களை நிறுத்திவிட்டு சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குமுறையை முறையாக பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.