சீனாவால் உலகத்திற்கே பெரிய சேதம்.. கொதிக்கும் டொனால்ட் ட்ரம்ப்.. பதிலடிக்கு தயாராகிறது அமெரிக்கா!
வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே மிகப் பெரிய சேதம் ஏற்படுவதற்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மற்றொரு பக்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சீன நிறுவனத்தின் செல்போன் செயலிகளை தடை செய்ய யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சீனா மீது குற்றம்சாட்டி வருகிறார் டொனால்ட் டிரம்ப். ஆரம்பத்திலேயே இது தொடர்பாக உலக நாடுகளுக்கு சீனா தகவல் சொல்லவில்லை என்பது ட்ரம்ப் வைக்கும் குற்றச்சாட்டு.
வேண்டும் என்றே, இவ்வாறு நடந்து கொண்டு பிற நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக சேதம் விளைவித்ததாக ஆரம்பத்திலேயே அவர் தெரிவித்திருந்த நிலையில், ஓரளவுக்கு கொரோனா பரவல் என்பது கட்டுப்பாட்டில் வந்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கிடுகிடுவென பாதிப்பு எண்ணிக்கை உயர தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு ஆதரவாக எப்போதும் எங்கள் ராணுவம் உறுதுணையாக இருக்கும்: அமெரிக்கா
அமெரிக்காவில் மோசமான பாதிப்பு
ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுவதால் அதிர்ச்சியில் உள்ளது அமெரிக்கா. உலகத்திலேயே அதிகமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அங்கு 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் அந்த நோய்க்கு பலியாகி உள்ளனர்.
|
ட்ரம்ப் ட்வீட்
இந்த நிலையில் அமெரிக்காவின் 244 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி அரசு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் பங்கேற்க செல்வதற்கு முன்பாக அதிபர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டிருந்தார். அதில், இந்த உலகத்திற்கும் அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய சேதம் ஏற்படுவதற்கு சீனா தான் காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார்.
ட்ரம்ப் கருத்து பின்னணி
இவர் வெறும் கொரோனா வைரஸ் பாதிப்பை மட்டும் வைத்து கூறுகிறாரா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் சீனா எல்லைப் பிரச்சனை செய்து தொல்லை கொடுத்து வருவதையும் சேர்த்து குறிப்பிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் அமெரிக்கா, சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது என்பது உறுதியாகியுள்ளது.
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா
வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின்போது சீனாவுக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் தொடர்பாக அதிபர் டிரம்ப் சில முக்கிய உத்தரவு பிறப்பிப்பார். எந்தெந்த விஷயங்களில் அந்த உத்தரவு இருக்கும் என்பதை மறைமுகமாக சொல்கிறேன். சீனாவின் உற்பத்தி சார்ந்த பொருட்கள், மருந்துகள் மற்றும் குடியேற்றம் தொடர்பாக இந்த உத்தரவுகள் இருக்கக்கூடும். ஆனால் இப்போது முழுமையாக என்னால் சொல்ல முடியாது என்றார்.
செயலிகள் மீது தடை
மற்றொரு பக்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ அளித்த பேட்டியில், சீன நாட்டு செல்போன் செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக அமெரிக்க ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியா தடை பிறப்பித்து உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக அமெரிக்க அதிபர், சீனாவுக்கு எதிராக பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இது உலக அளவில் சீனாவை தனிமைப்படுத்த உதவும்.