WHO உதவியுடன்..கொரோனா தோற்றம் பற்றிய உண்மையை மறைத்த சீனா..பரபரப்பை கிளப்பிய புதிய ரிப்போர்ட்
வாஷிங்டன்: வூஹான் நகரிலுள்ள வைரலாஜி மையத்தில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் அதை மறைக்கச் சீனா முன்றயாதகவும் அதற்கு உலக சுகாதார அமைப்பும் உதவியதாக அமெரிக்காவின் குடியரசு கட்சியினர் தங்கள் ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
உலகின் வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த ஒரு நாட்டினாலும் வைரஸ் பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை.
பிரிட்டன், இஸ்ரேல், தென் கொரியா போன்ற வெகு சில நாடுகள் மட்டும் ஊரடங்கு மற்றும் கொரோனா வேக்சின் என்ற திட்டத்தின் மூலம் வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வந்துள்ளன.
வலுக்கும் சந்தேகம்..வூஹான் மையத்திலிருந்து கொரோனா?தரவுகளை தரமறுக்கும் சீனா.. WHOஎடுத்த அதிரடி முடிவு
குடியரசு கட்சி
மனிதக் குல வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த காலத்தில் கொரோனாவுக்கு எதிரான வேக்சின்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இருந்தாலும்கூட கொரோனா வைரஸ் எப்படித் தோன்றியது என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. கொரோனா விலங்கில் இருந்து தோன்றியதா அல்லது வூஹான் ஆய்வு மையத்தில் இருந்து லீக் ஆனதா என்ற கேள்விக்கு யாரிடமும் உறுதியான பதில் இல்லை. இந்நிலையில், அமெரிக்காவின் குடியரசு கட்சியினர் The Origins of Covid-19: An Investigation of the Wuhan Institute of Virology' என்ற தலைப்பில் கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
வூஹான் வைரலாஜி ஆய்வகம்
அதில் கொரோனா வைரஸ் சீனா கூறுவதைப் போல வூஹான் விலங்கு சந்தையில் இருந்து பரவியிருக்க வாய்ப்பே இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அதில், "கொரோனா வைரஸ் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதிக்கு முன்னரே வூஹான் ஆய்வகத்தில் இருந்து லீக் ஆகியுள்ளது. ஏனென்றால் அன்றைய தினம் தான் வூஹான் வைரலாஜி மையத்தின் தரவுகளை உள்ளடக்கிய தளம் ஆஃப்லைனுக்கு சென்றது. அடுத்தடுத்த மாதங்களில் வூஹான் மையத்தில் இருந்து வைரஸ் வெளியேறியதை மறைக்கவே சீன அரசும் வூஹான் ஆய்வாளர்களும் முயன்றுள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பும்கூட இதனை மறைக்கவே முதலில் முயன்றது. சீனாவுக்கு ஆதரவாகவே உலக சுகாதார அமைப்பும் தொடக்கத்தில் செயல்பட்டது. சீனாவில் கொரோனா பரவல் பற்றி அரசின் கருத்து எதிரான கருத்துகளைக் கூறுபவர்கள் கைது செய்யப்பட்டனர். வைரஸ் ஆய்வக மாதிரிகள் அழிக்கப்பட்டன. ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவ வாய்ப்பில்லை என்பதையே சீன முதலில் நிரூவ விரும்பியது. அதற்கு உலக சுகாதார அமைப்பும் துணை போனது. வைரஸ் பாதிப்பு குறித்த தரவுகளைச் சீனா வெளியிட மறுத்தது.
உறுதி செய்கிறது
இதனால் உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்குச் சீனாவில் என்ன நடக்கிறது எனப் புரியாமல் போனது. ஆனால், அதற்குள் வைரஸ் பாதிப்பு ஹூபே மாகாணத்தின் முக்கிய பகுதிகளில் பரவிவிட்டதால், சீனாவால் அதை மறைக்க முடியாமல் போனது. எத்தனை பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதைச் சீனா கடைசி வரை வெளியுலகிற்குத் தெரிவிக்கவில்லை. இவை அனைத்துமே வூஹான் மையத்தில் இருந்து தான் வைரஸ் பரவியது என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.
WHO வல்லுநர் குழு
கொரோனா தோற்றம் குறித்த உண்மையை மறைக்கச் சீன அடுத்து எடுத்த நடவடிக்கை தான் மிகவும் ஆபத்தானது. வூஹான் ஆய்வு மையத்தில் சோதனை செய்ய அனுமதிக்க மறுத்த சீனா, அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதாக ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டியது. உலக சுகாதார அமைப்பினர் கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுக்குச் சீனா சென்ற போது, அவர்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தியது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் கூட சீனாவில் போதியளவு ஆய்வு நடத்தவில்லை என்றே தெரிவித்திருந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கொரோனா தோற்றம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழுவுக்குக் கூடுதல் நேரம் தேவை.
மற்ற நாடுகளுக்குப் பரவியது ஏன்
வைரஸ் பரவல் ஏற்பட்டதால், சீனா தனது பிற பகுதிகளில் ஊரடங்கை அறிவித்த போதிலும், வூஹான் நகருக்கும் மற்ற நாடுகளுக்கும் விமானச் சேவை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இதன் மூலம் சீனாவில் இருந்து மற்ற உலக நாடுகளுக்கும் வைரஸ் பரவியது. அதேபோல 2019 செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலேயே வூஹான் ஆய்வாளர்கள் கொரோனாவுக்கு ஒத்த அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா சிகிச்சை போலவே சிகிச்சை அளிக்கப்பட்டது.
உயிரி ஆயுதம்
2012 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் யுன்னன் குகையில் இருந்து மரபணு மற்றப்பட்டவைரசை சீன ஆய்வாளர்கள் சேகரித்துள்ளனர். சொல்லப்போனால் சீன அரசு 2019ஆம் ஆண்டின் முற்பகுதியில் இதனை உயிரி ஆயுதமாக மாற்ற முயன்றுள்ளது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அதில் முன் வைத்துள்ளனர்.
வூஹான் மையம்
கொரோனா வைரஸ் ஆய்வு மையத்தில் இருந்து தோன்றியதாக வெளியான தகவலை முதலில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கொரோனா தோற்றம் குறித்து ஆய்வு செய்யச் சீனா சென்ற உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்களும்கூட அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே குறிப்பிட்டனர். இருப்பினும், கடந்த சில மாதங்களுக்கு அமெரிக்கப் புலனாய்வுத் துறை வூஹான் மையத்தில் இருந்து கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தது. அதேபோல பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளும் கருத்து தெரிவித்தன. அதைத் தொடர்ந்து வூஹான் மையத்தில் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்ற கூற்று முக்கியத்துவம் பெற்றது குறிப்பிடத்தக்கது.