சீனாவின் லட்சணம் தெரிந்துவிட்டது.. லடாக் ஆவேச நடவடிக்கையே சாட்சி- அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் சுளீர்
வாஷிங்டன்: கிழக்கு லடாக்கில் இந்திய வீரர்கள் மீதான மிருகத்தனமான தாக்குதல் மற்றும் தென் சீனக் கடல் மற்றும் ஹாங்காங்கில் அதன் நகர்வுகள் உட்பட இந்தியாவுக்கு எதிரான சீனாவின் "மிகவும் ஆக்ரோஷமான" நடவடிக்கைகள் போன்றவை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு சிந்திக்கிறது என்பது குறித்தும் அதன் லட்சணம் குறித்து தெரிந்துவிட்டது என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறியுள்ளார்.
மே 5 முதல் கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீனப் படைகள் மோதலில் ஈடுபட்டன. ஜூன் 15 அன்று கால்வான் பள்ளத்தாக்கில் பதற்றம் அதிகரித்தது, இதில் சீன வீரர்கள் வன்முறையில் இறங்கியதால் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆனால் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் கிழக்கு லடாக்கில் இந்திய வீரர்கள் மீதான மிருகத்தனமாக தாக்குதல் நடத்திதாகவும். சீனர்கள் இந்தியாவுடன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் கூறினார்.
இந்திய வீரர்கள் கொலை
ஃபாக்ஸ் நியூஸ் ரேடியோவுக்கு பேட்டி அளித்த அவர் கூறும் போது, கிழக்கு லடாக் பிரச்சனை என்பது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒரு தகராறு, ஆனால் சீனா அதில் தான் யார் என்பதை வெளிக்காட்டியுள்ளது. சீன துருப்புக்கள் 20 இந்தியர்களை அடித்து கொலை செய்துள்ளார்கள். சீன துருப்புக்கள் இரும்பு கம்பிகள் கொண்ட கிளப்புகளை முள்வேலிகளால் சுற்றி, மிகவும் மோசமாக அடித்து, கொன்றுள்ளார்கள் என்றார்.
நாங்கள் நண்பர்கள்
அமெரிக்க-இந்தியா இருதரப்பு உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ'பிரையன் , இந்தியா ஒரு ஜனநாயகம் என்றும் அமெரிக்காவின் சிறந்த நண்பர்கள். "பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி (டொனால்ட்) டிரம்பும் ஒரு நல்ல உறவைக் கொண்டுள்ளனர். உண்மையில், கோவிட் நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் எங்கள் அதிபர் சென்ற கடைசி வெளிநாட்டு பயணம் இந்தியாவில் தான் இருந்தது. அங்குள்ள இந்திய மக்களிடம் எங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அவர்களுடன் எங்களுக்கு நிறைய பொதுவான விஷயம் உள்ளது. நாங்கள் ஆங்கிலம் பேசுகிறோம், நாங்கள் ஜனநாயக நாடுகள். இந்தியாவுடன் எங்களுக்கு வளர்ந்து வரும், மிகவும் வலுவான உறவு கிடைத்துள்ளது.
தென் சீனக் கடல்
தென் சீனக் கடலில் அடாவடியான ஆக்கிரமிப்பு, ஹாங்காங்கில் மோசமாக நடந்துகொள்வது, தைவானின் கொடுமைப்படுத்தி மிரட்டுவது, இந்தியா மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை போன்றவை சீன கம்யூனிஸ்ட் கட்சி இவற்றை எவ்வாறு சிந்திக்கிறது, அதன் லட்சணம் என்ன என்பதைப் பற்றி வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 1.3 மில்லியன் சதுர மைல் தென் சீனக் கடல் முழுவதையும் சீனா தனது ஆளுகைக்கு உட்பட்டது என்று கூறுகிறது. புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளால் உரிமை கோரப்பட்ட இப்பகுதியில் உள்ள செயற்கைத் தீவுகளில் சீனா இராணுவ தளங்களை உருவாக்கி வருகிறது. இது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்று"இவ்வாறு கூறினார்.
சீனாவின் நடத்தை
முன்னதாக, அமெரிக்க செனட் வெளியுறவுக் குழுவின் உறுப்பினரான செனட்டர் பாப் மெனண்டெஸ், சீனா தனது அண்டை நாடுகளைப் பொருட்படுத்தாமல் ஆசியாவின் வரைபடத்தை மீண்டும் உருவாக்க முயல்கிறது என்று குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறும் போது, இந்தியாவும் சீனாவும் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) உடன் இணைந்து செயல்படும்போது, பிராந்திய மோதல்களில் சீனாவின் ஆக்கிரோஷமான நடத்தை குறித்து நான் ஆழ்ந்த கவலைப்படுகிறேன். 2017 டோக்லாம் நிலைப்பாடு முதல் சிக்கிம் மற்றும் லடாக் எல்லைகளில் அண்மையில் நடந்த வன்முறைகள் வரை, பூட்டானிய எல்லைக்கு சீனாவின் புதிய கூற்றுக்கள் வரை, சீனா பெரும்பாலும் ஆசியாவின் வரைபடத்தை அதன் அண்டை நாடுகளைப் பொருட்படுத்தாமல் மறுவடிவமைக்க முயன்றது. இத்தகைய நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை சர்வதேச சமூகம் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.