தூதரகம் மூடல்.. அடுத்து சீன நிறுவனங்களுக்கு பங்குச் சந்தையில் நெருக்கடி.. ட்ரம்ப்பின் புதிய அஸ்திரம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தைகளில் இடம் பெற்று இருக்கும் சீனா நிறுவனங்கள் குறித்த தகவல்களை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கணக்கெடுக்க துவங்கியுள்ளது. அமெரிக்காவின் தணிக்கை நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது விரைவில் ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்துதான் பரவியது என்று அமெரிக்கா உறுதியாக நம்பி வருகிறது. தொடர்ந்து சீனாவை குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் தயங்கவில்லை. கொரோனா பரவுவதற்கு முன்பிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. மீண்டும் சீனாவுடன் வர்த்தகம் வைத்துக் கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளோம் என்று சமீபத்தில் ட்ரம்ப் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சீனாவின் டிக் டாக் ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தார். வரும் செப்டம்பர் 15க்குள் டிக் டாக் இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தற்போது கெடு விதித்துள்ளார்.
இந்த நிலையில்தான் இன்று அமெரிக்காவின் நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தைகளில் இடம் பெற்று இருக்கும் சீன நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் தணிக்கை நெறிமுறைகளை பின்பற்றாத சீன நிறுவனங்களை அடையாளம் கண்டு அவற்றை பங்குச் சந்தை பட்டியலில் இருந்து நீக்குவது என்று ட்ரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.
நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மற்றும் நாஸ்டாக் பங்குச் சந்தைகளில் முறையாக நடந்து கொள்ளாத சீன நிறுவனங்களை பொது நிறுவன கணக்கியல் மேற்பார்வை வாரியத்தில் இருந்து நீக்குவது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களாக அறிவித்துக் கொள்ளாமல், பங்குகளை விற்று வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்பு நியூயார்க் ஸ்டாக் எக்சேஞ்ச் மற்றும் நாஸ்டாக்கில் தங்களை முறையாக சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் போன்ற விதிகளை சீன நிறுவனங்கள் மீறி இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதம் அமெரிக்கா புதிய சட்டங்களை கொண்டு வந்தது. அதன்படி பதிவு செய்து கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் பங்குச் சந்தைகளில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் நீக்கப்படும்.
சீனாவில் பரவும் புதிய வைரஸ்...டிக் போர்ன்...7 பேர் உயிரிழப்பு... மனிதனுக்கு மனிதன் பரவுமா?
சீனா மீது தொடர்ந்து அமெரிக்கா கோபத்தில் இருக்கிறது. சமீபத்தில் ஹூஸ்டனில் இருக்கும் சீன தூதரகத்தை மூடுமாறு வாஷிங்டன் உத்தரவு பிறப்பித்தது. ஹூஸ்டன் தூதரகம் ஒற்றர்களின் கூடாரமாக இருக்கிறது என்று அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது.
''சீனா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. சுதந்திரம் விரும்பும் மக்களுக்கு எதிரானதாக சீனா நடந்து கொள்கிறது. சீனா தொடர்ந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இது மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது'' என்று அமெரிக்க ஆளும் கட்சி உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.