வெளியில் மோதிக் கொண்டு.. 10 வருடமாக வட கொரியாவுடன் கமுக்கமான உறவை பேணி வரும் அமெரிக்க சிஐஏ!
வாஷிங்டன்: 10 ஆண்டுகளாக வடகொரியாவுடன் ரகசிய தகவல் தொடர்பை அமெரிக்க உளவு அமைப்பானது வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. இரு நாடுகளுக்குள்ளும் எவ்வித ராஜீய ரீதியிலான உறவுகளும் இல்லை. அது போல் இரு நாட்டு தலைநகரங்களில் பரஸ்பர தூதரகங்களும் அமைத்ததில்லை. நியூயார்க்கில் அமெரிக்காவுக்கான வடகொரியாவின் நிரந்தர அலுவலகம் செய்திகளை பரிமாறிக் கொள்ள அமைந்துள்ளது.
ஏவுகணை சோதனை நடத்தியதால் அமெரிக்கா அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜங் அன் இடையே டுவிட்டரிலும் பேட்டியிலும் கடுமையான சொற்களை பேசி வந்தனர்.
இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.
இந்நிலையில் இருநாட்டு தலைவர்களும் மீண்டும் பிப்ரவரி மாதம் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்தது. இந்த நிலையில் இரு நாட்டு தலைவர்களும் நட்பு பாராட்டுவதற்கு அமெரிக்க உளவு அமைப்புதான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் என்ற செய்தித்தாளில் வெளியான ஒரு செய்தியில் கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வடகொரியாவுடன் ரகசிய தகவல் தொடர்பை அமெரிக்க உளவு அமைப்பு வைத்திருந்தது. வடகொரியாவுடன் உளவு அமைப்பின் சில சந்திப்புகள் வெளிப்படையாகவே இருந்தன.
இந்த ரகசிய தகவல் தொடர்பு குறித்து அமெரிக்க உளவு அமைப்பும் வெள்ளை மாளிகையும் கருத்து கூற மறுத்துவிட்டன.