எதையும் அனுமதிக்க மாட்டேன்... அடம்பிடிக்கும் டிரம்ப்... செக் வைத்த அமெரிக்க நாடாளுமன்றம்
வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்பு கொள்கை மசோதாவைத் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி டிரம்ப் நிராகரித்ததற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். இருப்பினும், இதுவரை டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், தேர்தலில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.
டிரம்பின் பதவிகாலம் நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றும் எந்த மசோதாக்களுக்கும் டிரம்ப் தனது ஒப்புதலைத் தர மறுக்கிறார்.
பாதுகாப்பு கொள்கை மசோதா
அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கை மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது. 740 பில்லியின் டாலர் மதிப்புள்ள இந்த மசோதாவிலிருந்து கிடைக்கும் நிதி மூலமே பாதுகாப்புப் படையினருக்கு ஊதியம் அளிப்பது முதல் புவிசார் அரசியல் அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைத் தீர்மானிப்பது வரை அனைத்தும் மேற்கொள்ள முடியும்.
நோ சொன்ன டிரம்ப்
கடந்த 59 ஆண்டுகளாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் இச்சட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு வழங்கும் பாதுகாப்பை ரத்து செய்ய வேண்டும் என்று டிரம்ப் பல முறை கூறியும், அதை நிறைவேற்ற அமெரிக்க நாடாளுமன்றம் மறுத்துவிட்டது. இதைக் காரணமாகக் கூறி, டிரம்ப் பாதுகாப்பு மசோதாவை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்தார்.
நிராகரித்த நாடாளுமன்றம்
டிரம்பின் இந்த முடிவு காரணமாக அமெரிக்க ராணுவத்தின் அனைத்து நடவடிக்கைகளும் ஸ்தம்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அசாதாரண நிகழ்வாக அதிபரின் வீட்டோ முடிவை நிராகரிக்கப் புத்தாண்டு தினத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அதிபரின் முடிவை நிராகரிக்க மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. டிரம்பின் குடியரசு கட்சியினருக்கும் அவரது முடிவை மாற்றுவதற்கு ஆதரவாகவே வாக்களித்தனர். இதனால், டிரம்பின் வீட்டோ முடிவு 81-13 என்று நிராகரிக்கப்பட்டது.
டிரம்ப் முடிவுக்கு முட்டுக்கட்டை
மேலும், கொரோனாவால் வேலையிழந்த அமெரிக்கர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு, இதற்கு 832 பில்லியின் டாலர் மதிப்பிலான மசோதா கடந்த சில நாள்களுக்கு முன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதில் குறிப்பிட்டுள்ள தொகை குறைவாக உள்ளதாகக் கூறி, இதற்கு ஒப்புதல் அளிக்கவும் டிரம்ப் மறுத்துவிட்டார். இந்த தொகையை அதிகப்படுத்தவும் ஜனநாயகக் கட்சியினர் முயன்றனர். ஆனால், டிரம்பின் சொந்த குடியரசு கட்சியினரே இதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.
கூட்டத்தொடர் நிறைவு
தற்போதைய அரசின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இத்துடன் முடிகிறது. வரும் ஜனவரி 20ஆம் தேதி அந்நாட்டின் புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.