நாங்கள் இருக்கிறோம்.. கருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை
வாஷிங்டன்: இனவாத சமஉரிமைக்காக கருப்பின மக்களுடன் துணை நிற்போம் என ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய அமெரிக்க நிறுவனங்களின் தலைமை இயக்குநர்கள் டிம் குக், சத்ய நாதெல்லா, சுந்தர் பிச்சை ஆகியோர் தெரிவித்தனர்.
Recommended Video
கருப்பின இளைஞர் கொலையை கண்டித்து அமெரிக்காவே பற்றி எரிகிறது. கருப்பின மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் இந்த கொலையை கண்டித்து போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் கருப்பினத்தை சேர்ந்தவரும் முன்னாள் அதிபருமான பராக் ஒபாமா, ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் உண்மையில் நாம் 2020-ஆம் ஆண்டில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா என சந்தேகம் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுபோல் ஜார்ஜ் பிளாய்டு கொலையைக் கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் கடைகள் மூடப்பட்டுள்ளன. இனவாத சமஉரிமைக்கு ஆதரவாக ஆப்பிள் நிறுவனம் கடைகளை அடைத்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் டிம் குக் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில், கருப்பினர்கள் கொல்லப்படுவது காலம் காலமாக நடைபெறுவது வேதனை அளிக்கிறது.
அந்த வேதனை வன்முறை வடிவத்தில் மட்டும் இல்லை. ஆழமாக வேரூன்றிய பாகுபாட்டை சந்திப்பதிலும் உள்ளது. நமது சட்டங்கள் மாறியிருக்கின்றன. உண்மையை சொல்ல போனால் கருப்பின மக்களின் பாதுகாப்பிற்கு எந்த சட்டமும் இல்லை. ஜார்ஜ் பிளாய்டை கொன்றதால் கருப்பின மக்களின் அச்சம், வேதனை ஆகியவற்றை நாம் அங்கீகரித்து அவர்களுடன் துணை நிற்போம் என தெரிவித்துள்ளார் குக்.
அது போல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சத்ய நாதெல்லா இனவாத பிரச்சினை குறித்து அலுவலகக் கூட்டத்தில் எழுப்பியிருந்தார். அவர் கூறுகையில் நான் இப்போது பேசவுள்ள விவகாரம் நம் அனைவருக்கும் முக்கியமானது. அந்த சம்பவம் நம்மிடையே தாக்கத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியிருக்கும். தினந்தோறும் நடைபெறும் இனவாதம் மற்றும் வெறுப்புணர்வு ஒன்றும் அமெரிக்காவுக்கு புதிதல்ல. நாம் அறிந்ததே. இவற்றை நாம் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள வேண்டும். மற்றவர்களின் உணர்வுகளுக்கு அனுதாபம் காட்ட வேண்டும் என்றார்.
கருப்பின இளைஞர் இறப்பு ஒரு இனப்படுகொலை.. பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை பேசுகையில் இன்று கூகுள், யூடியூப் முகப்பு பக்கங்களில் கருப்பினத்தவர்களுக்காக ஒற்றுமையுடன் செயல்பட நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜார்ஜ் பிளாய்டு, பிரியோன்னா டெய்லர், ஆமவுத் ஆர்பெரி உள்ளிட்டோர் நினைவாக நாம் ஒற்றுமையாக இருப்போம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் கோபம், வருத்தம், அச்சம் ஆகியவற்றை கொண்டுள்ள கருப்பின மக்கள் தனிமைப்படுத்தப்பட்டோர் அல்ல, நாங்கள் இருக்கிறோம். இனவாத சமஉரிமையை ஆதரிக்கிறோம் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.