மரண பீதி.. அமெரிக்கா. இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனியில் கொரோனாவால் நேர்ந்த பயங்கரம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 4,010 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அமெரிக்கா இதுவரை சந்திக்காத உயிரிழப்பு என்று கூட சொல்லலாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் 16க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள்.. அமெரிக்கா மட்டுமின்றி, இங்கிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ, ஜெர்மனி, ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் உயிரிழப்பு மிகமிக அதிகம் ஆகும்.
அணுகுண்டை ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய போது கூட இத்தனை ஆபத்துக்களை உலகம் பார்த்திருக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். அணுகுண்டால் ஒரு லட்சம் பேர் இறந்திருப்பார்கள். ஆனால் இங்கே ஒவ்வொரு நாட்டிலும் லட்சம் பேருக்கும் மேல் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 415,530 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 212,893 பேரும், இந்தியாவில் 152,906 பேரும், மெக்ஸிகோவில் 142,832 பேரும், இங்கிலாந்தில் 93290 பேரும் பலியாகி உள்ளனர்.
உலக நாடுகள்
சீனாவில் 2019 டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக உலக நாடுகள் சொல்கின்றன. ஆனால் ஏன் பாதிப்பும், உயிரிழப்பும் கொஞ்சமும் அந்த நாடுகளில் குறையவே இல்லை என்பது அந்த நாடுகளுக்கே வெளிச்சம்
உலகில் கொரோனா மரணம்
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 9,72,66,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 20,81,173 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து 6,98,23,593 பேர் மீண்டுள்ளனர். உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 2,53,61,494 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
பிரேசில் பாதிப்பு
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 24,987,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 1,06,11,719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 86,39,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 36,33,952 பேரும், இங்கிலாந்தில் 35,05,754 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உச்சம் பெற்ற கொரோனா
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 1,77,191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 64,126 பேருக்கும், ஸ்பெயினில் 41,576 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 38,905 பேருக்கும், பிரான்சில் 26,784 பேருக்கும் நேற்று ஒரு நாளில் தொற்று உறுதியாகி உள்ளது.
இங்கிலாந்தில் 1,820 மரணம்
உலகிலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் அமெரிக்காவில் 4,010 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்தில் 1,820 பேரும், மெக்ஸிகோவில் 1584 பேரும் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் 1,382 பேரும், ஜெர்மனியில் 1,052 பேரும் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் ஒரே நாளில் 597 பேரும், தென் ஆப்பிரிக்காவில் 566 பேரும், இத்தாலியில் 524 பேரும் ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை அண்மைக்காலத்தில் இப்படி ஒரு உயிரிழப்பை உலக நாடுகள் கொரோனாவால் சந்தித்து இல்லை. கொரோனா பரவல் நின்று போன நாடுகளிலும் மீண்டும் பரவி பலத்த உயிர்சேதத்தை ஏற்படுத்தி வரும் மரண பீதியை ஏற்படுத்தி உள்ளது.