கொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன? 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க!
வாஷிங்டன்: கொரோனா வைரசை பரவவிடாமல் தடுக்க பல்வேறு தடுப்பூசிகள் ஏன் தேவை என்பது பற்றியும், ஒருவேளை தடுப்பூசி பலனளிக்காவிட்டால், அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றியும், விளக்கம் அளித்துள்ளார், உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி, டாக்டர். சவுமியா சுவாமிநாதன்.
அல்ஜசிரா ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்படி என்ன கூறியுள்ளார் சவுமியா சுவாமிநாதன்? இதோ பாருங்கள்:
கோவிட் 19 தொற்றுநோய் என்பது முன்பு எப்போதும் இல்லாத, நெருக்கடி. இதைச் சமாளிக்க, உலக சுகாதார மற்றும் விஞ்ஞான சமூகங்கள் 12 முதல் 18 மாதங்களில் ஒரு தடுப்பூசியை உருவாக்க செயல்பட்டு வருகின்றன. பொதுவாக ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை தடுப்பூசி தயாரிக்க காலம் பிடிக்கும். ஆனால் இப்போது இவ்வளவு வேகமாக தயாரிப்பு பணிகள் நடக்கின்றன.
மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி
மரபணு வரிசை கண்டுபிடிப்பு
கடந்த ஆண்டு டிசம்பரில் SARS-CoV-2 வைரஸ் தோன்றிய உடனேயே, விஞ்ஞானிகள் அதன் மூலக்கூறுகளை ஆய்வு செய்தனர். மேலும், மிகப்பெரிய அளவிலான ஆய்வுப் பணிகள் தொடங்கின. ஜனவரி நடுப்பகுதியில், விஞ்ஞானிகள் வைரஸ் என்னவென்று அறிந்தனர், அதன் மரபணு வரிசையைப் புரிந்து கொண்டனர், இதன்பிறகுதான், உலகெங்கிலும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் துவங்கின.
வேகமாக பணிகள்
வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மனித மருத்துவ பரிசோதனைகள் தொடங்கின. உலகெங்கிலும், இப்போது 200 க்கும் மேற்பட்ட தடுப்பூசி தயாரிப்பாளர்கள் உள்ளனர். மனித மருத்துவ சோதனை கட்டத்தில் குறைந்தது 24 நிறுவனங்கள் உள்ளன. நாடுகளுக்கிடையில் நிறைய சர்வதேச ஒத்துழைப்பு உள்ளது. கல்விக் குழுக்கள் சிறிய பயோடெக் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. சிறிய பயோடெக்குகள் பெரிய மருந்து நிறுவனங்களுடன் ஒத்துழைக்கின்றன, மேலும் பெரிய மருந்துகள் கூட ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து சில காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றன.
ஆய்வுகள் பலவிதம்
சிம்பன்சி அடினோவைரஸை அடிப்படையாகக் கொண்டு, இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி உள்ளது. இது முன்னர் எபோலா தடுப்பூசியை உருவாக்க பயன்படுத்தப்பட்டது. மற்றொரு தடுப்பூசி சீனாவிலும் அடினோவைரஸ் அடிப்படையை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. மாடர்னா தடுப்பூசி, ஆர்.என்.ஏ முறையில் தயாராகிறது. ரஷ்யா, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரேசில் மற்றும் பிற நாடுகளிலும் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.
மந்தை எதிர்ப்பு சக்தி
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கையாகவே நோய்க்கு எதிராக எதிர்ப்பு சக்தியை பெற ஆரம்பிப்பார்கள். எனவே நோய்த்தொற்று ஏற்படாதவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும். தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி உடனே தேவையில்லை. இருப்பினும் கொரோனா பாதித்தவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் நீடிக்கும், அல்லது எவ்வளவு காலம் அவர்களுக்கு ஆன்டிபாடிகள் இருக்கலாம் என்பதை உறுதியாக செய்ய முடியாது. ஆன்டிபாடிகள் நீண்ட காலம் நீடிக்காவிட்டால் சிலருக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு தடுப்பூசி தேவைப்படலாம். தடுப்பூசி பெறும் மற்றவர்களுக்கும் பின்னர் ஒரு பூஸ்டர் தேவைப்படலாம்.
ஸ்பைக் புரதம்
கோவிட்-19 மற்ற வைரஸ்களைப் போலவே, அது பெருகும்போது உருமாறும். இது எதிர்கால தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை, வைரஸ் முக்கியமான பகுதியான ஸ்பைக் புரதம் அமைப்பில் மாற்றமடையவில்லை. எனவேதான், பெரும்பாலான தடுப்பூசிகள் இந்த ஸ்பைக் புரதத்திற்கு எதிராக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதை நோக்கமாக கொண்டு உள்ளன. ஒருவேளை ஸ்பைக் புரதம் அமைப்பு மாறிவிட்டால், தடுப்பூசி பலன் கொடுக்காத நிலை உருவாகிவிடும்.
ஆய்வுகள் அவசியம்
வைரஸ் காலப்போக்கில் உருமாறும்போது, அதை நாம் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும். அதனால்தான், இந்த கட்டத்தில், இந்த தடுப்பூசி ஒரு உலகளாவிய தடுப்பூசியாக இருக்க முடியாது. ஒரே தடுப்பூசி போதுமா, அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எடுக்க வேண்டுமா என்று கணிப்பது கடினம். ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசியை புனரமைக்க வேண்டுமா என்பதும் எங்களுக்குத் தெரியாது. இந்த கட்டத்தில், இவை அனைத்தும் ஓபன் கேள்விகளாக மிஞ்சுகின்றன.
தடுப்பூசி வெற்றி
வரலாற்று ரீதியாக, சோதனைக்கு உட்படும் தடுப்பூசிகளில் 10 சதவீதத்துக்கும் குறைவானவையே வெற்றிகரமாக உள்ளன. எனவே அதிக எண்ணிக்கையிலான முயற்சிகள் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. பலவிதமான முன்னேற்றங்கள், முயற்சிகள் வெற்றிபெறும் என்று நம்புகிறோம். மனித மருத்துவ பரிசோதனைகளில் சில தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதால், அவை அடுத்த ஆண்டு சந்தையில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் சரியாக கணிக்க மிகவும் கடினமாக இருக்கிறது.
முதலில் தடுப்பூசி யாருக்கு?
ஒரு வெற்றிகரமான தடுப்பூசியாக இருந்தால் கூட உலக மக்கள் அனைவருக்கும் தேவையான அளவுக்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அளவுகள் இருக்குமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் தடுப்பூசி போட 8 அல்லது 10 பில்லியன் அளவு டோஸ் தேவை. நம்மிடம் சில நூறு மில்லியன் அளவுகள்தான் ஆரம்பத்தில் இருக்கலாம். எனவே மக்கள் தொகையில் சில பிரிவுகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதாவது முன்வரிசை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள், சமூக பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் மிக அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை கொடுக்கலாம். மேலும், 2022க்குள், இன்னும் பல தடுப்பூசிகள் உற்பத்தியாகலாம்.
தடுப்பூசி இல்லாவிட்டால்
தடுப்பூசி தயாரிக்க முடியாவிட்டால்? என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. அப்படி ஒரு நிலை வந்தால், போதுமான மக்கள் தொகைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்வரை கோவிட் 19 பரவ வாய்ப்பு உள்ளது. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மக்களுக்கு கிடைத்தால், கொரோனா பரவுவது நிற்கும். இது ஒரு தடுப்பூசி மூலமாகவோ அல்லது இயற்கை தொற்றுநோயினூடாகவோ பெறப்படலாம். ஆனால் வழக்கமாக, சுமார் 60 முதல் 70 சதவிகித மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு குணமானால்தான் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி செயல்படும். கோவிட் 19 வைரஸ் வலுவாகவோ அல்லது லேசாகவோ மாறக்கூடும். இது வலுவடைந்தால், அது விரைவாக பரவக்கூடும். இது குறைவான சக்தி கொண்ட வைரஸாக மாறினால், மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே மேல் சுவாச நோய்த்தொற்று என்ற அளவில் மட்டும் நின்றுவிடும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தடுப்பூசி இல்லாத நிலை இருந்தால், குறுகிய காலத்தில், நமக்கு சிறந்த சிகிச்சைகள் தேவை, ஆக்ஸிஜன் போன்ற விஷயங்கள் இருப்பு வைக்கப்பட வேண்டும். மிகவும் மோசமான பாதிப்புக்கு வழங்கப்படும் டெக்ஸாமெதாசோன் மற்றும் விரைவாக குணப்படுத்தும் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் அதுவரை பலனளிக்கும். ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டு பரவலாகக் கிடைக்கும் வரை, தொற்றுநோய் பரவுவதைக் குறைக்க நாடுகள் தற்போது பின்பற்றப்படும், பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர வேண்டும். தடுப்பூசி நெருங்கிவிட்டது, பிரச்சினைகளை தீர்க்கப் போகிறது என்று நாம் மெத்தனமாக இருந்துவிட கூடாது. குறைந்த பட்சம் ஓரிரு வருடங்களுக்கு, உலகெங்கிலும் போதுமான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறும் வரை, தொடர்பு அறிதல், உடல் ரீதியாக விலகியிருத்தல், தனிமைப்படுத்துதல், முகக் கவசம் அணிதல் மற்றும் கை சுகாதாரம் போன்ற பொது சுகாதார நடவடிக்கைகள் நமக்குத் தேவைப்படும். இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பாதிக்காது
ஒரு தடுப்பூசி வந்தாலும் அல்லது தடுப்பூசி இல்லாத மந்தை எதிர்ப்பு சக்தியாலும், எப்படி இருந்தாலும், கோவிட் 19 வைரஸ் உலகிலிருந்து, முற்றிலும் மறைந்து போக வாய்ப்பில்லை, ஏனெனில் அது இப்போது மக்களிடையே மிகவும் பரவலாகியுள்ளது. இது எல்லா இடங்களிலும் உள்ளது. இது எதிர்காலத்தில் மிகக் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தும் தொற்றுநோயாக தொடரக்கூடும். அதாவது உயிரை பாதிக்கும் அளவுக்கு இல்லாமல் இந்த வைரஸ் சமூகத்தினரிடையே தொடரக் கூடும். இவ்வாறு சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.