நியூயார்க்கில் மட்டும் 20000 பேருக்கு கொரோனா.. செத்து மடியும் மக்கள்.. அதிர்ச்சியில் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42200 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் என்ற கோவிட் 19 அரக்கன். கண்ணுக்கு தெரியாத இந்த முள்வடிவ வைரஸ் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தையே சிதைத்து நுரையீரலை கடுமையாக பாதித்து மனிதர்களை கொன்று குவித்து வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் அரக்கனிடம் சிக்கி இதுவரை உலகம் முழுவதும் சுமார் 19 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 4லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகின் பணக்கார நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், சீனா உள்பட உலகின் எந்த நாடும் கொரோனாவின் கொடூர கரங்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி சொன்னது போல், உலகப் போரை விட பேரழிவை உலகிற்கே கொரோனா ஏற்படுத்தி வருகிறது,
கம்யூனிட்டி பரவல்?.. சைதாப்பேட்டையில் அந்த ஒரு கேஸ்.. கொரோனா வந்தது எப்படி? நீடிக்கும் மர்மம்!
கடுமையாக பாதிப்பு
இந்நிலையில் உலகின் நாட்டாமை போல் திகழும் அமெரிக்காவை கொரோனா வைரஸ் கடுமையாக பாதித்துள்ளது. இதுவரை அமெரிக்காவின் 100 ஆண்டு சரித்திரத்தை புரட்டி பார்த்தால் இப்படி ஒரு கொள்ளை நோயிடம் அந்த மக்கள் சிக்கியிருப்பார்களா என்பது பெரும் கேள்விக்குறி தான். அந்த அளவுக்கு அமெரிக்க மக்கள் கொரோனாவைரஸ் தொற்றால் வேகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
700 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் சேர்த்து இதுவரை 42200 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த எண்ணிக்கை இன்று அதிகாலை நிலவரம் ஆகும். இப்போது இன்னும் ஒரு மடங்கு அதிகரித்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
192 பேர் நியூயார்க்கில் பலி
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரில் கொரோனா வைரஸ் படு பயங்கரமாக பரவி வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி சுமார் 20875 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருந்தது. இதுவரை 192 பேர் அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வருகிற நாட்களில் நியூயார்க் நகரில் பலியானோர் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் என்று அச்சம் நிலவுவதாக அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருப்பதால் நியூயார்க் நகரம் அந்த தொற்று நோய் தாக்குதலின் மையப்பகுதியாக உள்ளது. இங்கு 78 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது என்றார்.
313000 பேருக்கு சோதனை
அமெரிக்கா முழுவதும் 313000 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை இதுவரை நடத்தப்பட்டுள்ளது. கொரானாவால் பாதிக்கப்படுவோரில் இரண்டில் ஒருவர் நியூயார்க்கை சேர்ந்தவர் ஆவார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பரவி உள்ளது. ஒரே நாளில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவது 12 சதவீதம் என்ற அளவில் இருந்த நிலையில் அது தினசரி அதிகரிக்கும் வேகம் 30 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. மக்களிடம் தனிமைப்படுத்துதல் (social distancing) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் கடும் எச்சரிக்கை
இந்நிலையில் அமெரிக்காவில் முக்கிய மருந்துகள், மருத்துவ பொருட்கள், தனிநபர் பாதுகாப்பு கருவிகளான முககவசம், கை கழுவும் திரவம் (சானிடைசர்) ஆகியவற்றை பதுக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் இதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். இதுபற்றி டிரம்ப் கூறுகையில், முக்கிய மருந்துகள், பாதுகாப்பு கருவிகளை கூடுதல் விலைக்கு விற்போர், பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கையை அரசு எடுக்கும். புரியும்படி சொல்வதென்றால், அமெரிக்க மக்களின் துன்பத்தை பயன்படுத்தி ஆதாயம் அடைய ஒருவரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்காவில் நியூயார்க் போலவே வாஷிங்டன், கலிபோர்னியா ஆகிய பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு முன்னுரிமை அடிப்படையில் முக்கிய மருந்துகள், முககவசங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகள் வாங்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் கூறினார்