21 பக்கங்கள்.. எல்லாமே மரண அறிவிப்புகள்.. அமெரிக்காவை அலற வைத்த பத்திரிகை.. சோகத்தின் உச்சம்
21 பக்கங்களில் மரண அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ஒரு அமெரிக்க பத்திரிகை
வாஷிங்டன்: எத்தனையோ உலக நாடுகளின் மரண ஓலங்களைப் பார்த்த நாடு அமெரிக்கா. ஆனால் இன்று அந்த நாட்டின் மரண ஓலம் அனைவரிடத்திலும் அனுதாபத்தைக் குவித்து வருகிறது. கொரோனாவிடம் சிக்கி உயிர்கள் கொத்துக் கொத்தாக உதிர்ந்து கொண்டுள்ளன அந்த நாட்டில்.
Recommended Video
இதன் உச்சத்தை உணர்த்தும் முகமாக இருக்கிறது போஸ்டன் குளோப் பத்திரிகையின் 21 பக்க மரண அறிவிப்புகள். இதுவரை இப்படி ஒரு சோகத்தை அந்த நாடு சந்தித்திருக்காது. அல்லது குறைந்தபட்சம் தற்போதைய தலைமுறைக்கு இது மிக மிக அதிர்ச்சியான ஒரு நிகழ்வுதான்.
நம்மிடம் நிச்சயம் கொரோனா வராது என்று சொல்லிக் கொண்டு திரிந்தனர் அமெரிக்கர்கள்... அதை விட மோசமாக அந்த நாட்டின் அதிபர் டிரம்ப்பே கூட அலட்சியமாகத்தான் இருந்தார்.. ஆனால் இன்று அமெரிக்காவை உண்டு இல்லை என்று புரட்டிப் போட்டுக் கொண்டுள்ளது கொரோனா. அமெரிக்கர்களின் அலட்சியமே அவர்களின் இன்றைய துயரில் பாதிக்குக் காரணம்!!
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா சுதாரிப்பாக இருக்கவில்லை. அமெரிக்கர்கள் அடிப்படையில் எதற்கும் கட்டுப்படுகிறவர்கள் கிடையாது. சுதந்திரத்தை அதிகம் விரும்புவார்கள். அதனால் கொரோனா தொடர்பான விவகாரத்திலும் கூட அவர்கள் கட்டுப்பாடு காக்கவில்லை. அதன் விளைவை இப்போது அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான போஸ்டன் குளோப் பத்திரிகையில் ஒரு துயரமான விஷயத்தைப் பார்க்க முடிந்தது. அதாவது அந்த பத்திரிகையின் 16வது பக்கத்திலிருந்து 21 பக்கங்களுக்கு வெறும் மரண அறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. அனைத்து மரணம் தொடர்பான விளம்பரங்கள். எல்லாமே கொரோனா மரணங்கள்தான்.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதியுடன் ஒப்பிட்டால் அப்போது வெறும் 7 பக்கங்களில்தான் மரணச் செய்திகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தற்போது 21 பக்கங்களை மரணம் நிரப்பியுள்ளது. வழக்கமாக வெளியாகும் செய்திகளை கூட நிறுத்தி விட்டு மரணச் செய்திகளை போடும் நிலைக்கு போய் விட்டது இந்த பத்திரிகை.
மரண சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மரண அறிவித்தல் விளம்பரங்களுக்கு அதிக இடம் தேவைப்படுவதாக அந்த பத்திரிகையின் உதவி நிர்வாக ஆசிரியர் மேரி கிரீன் கூறியுள்ளார். அதிக அளவில் மரண விளம்பரங்கள் வந்ததால் வழக்கமாக வரும் பக்கங்களை விட கூடுதல் பக்கங்களுடன் அந்தப் பத்திரிகையின் பிரின்ட் வெர்ஷன் வெளியாகியுள்ளதாம்.
தற்போது இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கும், அதிக அளவில் மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பலரும் விளம்பரங்கள் மூலமாக மரண அறிவித்தலை வெளியிடுகின்றனர், இரங்கல் தெரிவிக்கின்றனர். இதனால்தான் பத்திரிகைகளில் மரண அறிவித்தல் விளம்பரங்கள் அதிகரிக்க முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் 21 பக்கங்களில் மரண அறிவித்தல் என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
இந்த விளம்பரங்களைக் கொடுத்தவர்கள் பெரும்பாலும் மாசசூசட்ஸ், கனக்டிகட், ரோட் ஐலன்ட், மெயின், நியூ ஹாம்ப்ஷயர், வெர்மான்ட், கலிபோர்னியா, புளோரிடா, மினசோட்டா, நியூ ஜெர்சி, நியூயார்க், வடக்கு கரோலினா, டென்னஸ்ஸி, டெக்ஸாஸ், விர்ஜீனியா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதேபோல ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் மரண அறிவித்தல்களும் கூட இதில் இடம் பெற்றனவாம்.
இந்த பட்டியலில் உள்ளவர்களில் எத்தனை பேர் கொரோனாவுக்குப் பலியானவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. சிலருடைய அறிவித்தல்களில் கொரோனா மரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலானவற்றில் எந்த குறிப்பும் இடம் பெறவில்லை.