கொரோனா வைரஸ் பாதித்தவர் தும்மல் சளியில் 27 அடி வரை வைரஸ் பாய்ந்து செல்லும்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தும்மும்போது அவரது மூக்கில் இருந்து வெளியாகும் நீர் துளிகள் 27 அடி வரை வைரஸ் உடன் பாய்ந்து செல்லும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல லட்சக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. இதுவரையில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 47 ஆயிரத்து 745 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை இந்த வைரஸ் தாக்கி குணமடைந்தவர்கள் என்று பார்த்தால் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 286 பேர் குணமடைந்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு
கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளி தான் மிக முக்கியமானது என்று மருத்துவர்களும் அரசும் அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் சமூக விலகலை கடைபிடித்தால் இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
தும்மலில் வைரஸ்
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தும்மும்போது அவரது மூக்கில் இருந்து வெளியாகும் நீர்த்துளி 27 அடி வரை வைரஸ் உடன் பாய்ந்து செல்லக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். இது தொடர்பாக அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆராய்ச்சியாளர் லிடியா பவுரவுபியா எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ஜர்னல் ஆப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
காற்றில் இருக்கும்
இந்த கட்டுரையில் ஆராய்ச்சியாளர் லிடியா கூறியுள்ளதாவது, "கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என்றால் பொது மக்கள் கட்டாயமாக சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போது அவரது மூக்கில் இருந்து வெளிப்படும் சளி துளிகள் 27 அடி தூரம் வரை காற்றில் பரவும் அதன்மூலம் வைரஸும் காற்றில் பரவும் ஆபத்து உள்ளது. அதாவது 23 அடி முதல் 27 அடி தூரம் வரை அவரைச் சுற்றி வைரஸ் காற்றில் பரவி இருக்கும்.
வெப்பம் இருந்தால் காலி
எனவே இந்த இடைவெளிகளில் யாராவது அப்போது செல்லும்போது அவரையும் வைரஸ் தாக்கக்கூடும். ஆனால் வெப்பநிலை அதிகமாக அதாவது கடும் வெப்பமான பகுதிகளில் சளி துளிகள் வேகமாக ஆவியாகிவிடும். ஆனால் அதேநேரம் வெப்பநிலை குறைவான பகுதிகளில் அல்லது ஏசி அறைகளில், குளிர்ச்சியான பகுதிகளில் வைரஸ் அங்கேயே பரவியிருக்கும்." இவ்வாறு அந்த ஆய்வில் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா மறுப்பு
ஆனால் இந்த ஆய்வு தவறானது என்றும், மக்களை தவறாக வழி நடத்தும் என்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தும்மல் இருக்கும் என்று கூற முடியாது என்றும் அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு வகையான தகவல்கள் நாள்தோறும் ஆய்வுகள் என்று வெளியாகி வருகின்றன. இந்த ஆய்வுகள் சில பாசிட்டிவாக இருந்தாலும் பல ஆய்வுகள் மக்களை பயமுறுத்தும் வகையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.