இன்னும் சில வாரம்தான்.. கொரோனா தடுப்பூசி வருகிறது.. இருண்ட காலம் இனி இல்லை- பிடனுக்கு ட்ரம்ப் பதிலடி
வாஷிங்டன்: இன்னும் சில வாரங்களில் கொரோனா வைரஸ் தடுப் பூசி வெளியாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரும் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ஆகியோர் நடுவே இன்று விவாதம் நடைபெற்றது.
ஏற்கனவே, இவர்கள் இடையே கடந்த மாதம் 29ம் தேதி ஓஹியோ மாகாணத்தில் ஒரு நேரடி விவாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாவது விவாதம் ரத்தானது. ட்ரம்புக்கு கொரோனா ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில்தான் இன்று இருவரிடையே இன்று டென்னசிலுள்ள நாஷ்வில்லி பல்கலைக்கழகத்தில் வாதம் நடைபெற்றது .
அப்போது ஜோ பிடன் பேசுகையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக 2 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்கர்கள் பலியாகியுள்ளனர். இத்தனை அமெரிக்க மக்கள் இறப்பதற்கு அனுமதித்த ஒருவர் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராக இருக்க முடியாது. நாம் ஒரு இருண்ட குளிர் காலத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு ஜோ பிடன் தெரிவித்தார்.
ட்ரம்ப் இதற்குப் பதிலடி கொடுத்து பேசினார். அவர் கூறுகையில், இருண்ட குளிர்காலம் வரப்போவது கிடையாது. நாம் இப்போதுதான் திருப்புமுனை கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா வைரஸ் ஓடிப் போகப் போகிறது.
ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கு நல்லது செய்தது நான் மட்டுமே -டிரம்ப்
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து நம்மிடம் இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் அது நடைமுறைக்கு வரும். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.
மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதம் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மருந்து நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா வைரஸ் வேக்சின் அடுத்த ஆண்டுதான் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் டிரம்ப் இன்னும் சில வாரங்களில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.