2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி - அமெரிக்கா அறிவிப்பு
2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டு பயணிகள் அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: இரண்டு டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் நவம்பர் 8ஆம் தேதி முதல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அவசியம் எனவும் அமெரிக்கா வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு எடுத்த கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் 92,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 4,57,38,585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 3,40,52,687 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் 1,705 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 7,43,880பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா முதல் அலை பரவலிலிருந்தே அமெரிக்கா கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. அதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அந்நாட்டின் தரைவழி எல்லைகள் மூடப்பட்டன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா மற்றும் இதரப் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
விபச்சாரம்.. நிர்வாண கோலத்தில்.. கை, கால்கள் கட்டப்பட்டு சூட்கேஸில் பெண் சடலம்.. என்ன நடந்தது?
அமெரிக்கா எல்லைகள்
இந்நிலையில் நவம்பர் மாதம் முதல் அமெரிக்க நாட்டின் தரைவழி எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் நவம்பர் 8ஆம் தேதி முதல் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பயணிகள் அனுமதி
கோவிட் -19 தொற்று நோயை தடுக்கும் வகையில் மெக்ஸிகோ மற்றும் கனடாவுடனான நில எல்லைகளில் அத்தியாவசியமற்ற பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் மார்ச் 2020 முதல் அமலில் உள்ளன. கடந்த 21 மாதங்களாக இருந்து வந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் அமெரிக்க நாட்டின் தரைவழி எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டு பயணிகள் அடுத்த மாதம் 8ஆம் தேதி முதல் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதழ்
நவம்பர் 8 முதல் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளை சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அவசியம் எனவும் அமெரிக்கா வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு எடுத்த கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வேண்டும். பயணம் முழுக்க முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அத்துடன் தொற்று ஏற்பட்டால் தொடர்பிலிருந்த நபர்களை கண்டறிவதற்காக மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 8 முதல் வரலாம்
அமெரிக்காவில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று ஜோபிடன் அரசுக்கு பல்வேறு நாடுகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வெளிநாட்டு பயணிகள் வருவதற்கான தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கெவின் முனோஸ் நவம்பர் 8 ஆம் தேதியை ட்விட்டரில் உறுதிசெய்தார், இந்தக் கொள்கை "பொது சுகாதாரம், கடுமையான மற்றும் சீரான வழிகாட்டல்" என்று பதிவிட்டுள்ளார். வெள்ளைமாளிகையின் அறிவிப்பை அமெரிக்காவின் ஸ்வீடன் நாட்டு தூதர் கரின் ஓலோஃப்ஸ்டாடர் உட்பட பலர் பாராட்டினர், இது "மிகவும் வரவேற்கத்தக்க செய்தி" என்று தெரிவித்துள்ளார்.