கொரோனாவால் உயிரிழப்பு மிக மோசமாகிறது.. அமெரிக்கா, மெக்ஸிகோ, பிரேசில், இங்கிலாந்தில் பெருந்துயரம்
வாஷிங்டன்: அமெரிக்கா மெக்ஸிகோ, பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, ரஷ்யா போன்ற மேற்கத்திய நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மிக கடுமையாக உயர்ந்து வருவது அந்த நாடுகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
சீனாவில் கடந்த 2019 டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா தொற்றால் அமெரிக்காவில் இதுவரை 419,793 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 214,228 பேரும், இந்தியாவில் 153,053 பேரும், மெக்ஸிகோவில் 144,371 பேரும், இங்கிலாந்தில் 94,580 பேரும், இத்தாலியில் 84,202 பேரும் பலியாகி உள்ளனர்.
இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனாவுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி மருந்துகள் போடும் பணி இன்னும் முழுமையாக நடைபெறவில்லையோ என்பதையே இந்த பரவல் காட்டுகிறது. அதேநேரம் வெப்பநிலை மிக குறைவாக உள்ள நாடுகளையே மிக மோசமாக பாதித்து வருவதும் தெரிகிறது.
20,97,737 பேர் மரணம்
இன்றைய நிலையில் உலகில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,80,32,726 ஆக உயர்ந்துள்ளது. இன்றுடன் உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 20,97,737 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 7,04,30,430 பேர் மீண்டனர். உலகில் தற்போது கொரோனா பாதிப்புடன் 2,55,04,559 பேர் சிசிச்சை பெறுகிறார்கள்.
இந்தியா பாதிப்பு
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 2,51,78,628 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 1,06,25,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 86,99,814 பேரும், ரஷ்யாவில் 36,55,839 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 35,43,646 பேரும், பிரான்சில் 29,87,965 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா கலக்கம்
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 177,464 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 59,946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.ஸ்பெயினில் 44357, இங்கிலாந்தில் 37,892, பிரான்சில் 22,848 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துயரம்
உலகிலேயே மிக அதிகபட்சமாக ஒரே நாளில் அமெரிக்காவில் 3,880 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மெக்ஸிகோவில் 1,539, பிரேசிலில் 1,335, இங்கிலாந்தில் 1,290 பேர் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதேபோல் ஜெர்மனியில் 855, தென் ஆப்பிரிக்காவில் 647, ரஷ்யாவில் 612 பேர் ஒரு நாளில் மரணம் அடைந்துள்ளனர். உயிரிழப்பு கடுமையாக உயர்ந்து வருவது மேற்கத்திய நாடுகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.