என்னாக போகுதோ.. ஒவ்வொன்னும் எத்தாத்தண்டி.. பெரிய பெரிய புயல்கள்.. ராட்சத சூறாவளிகள்.. ஷாக் ஆய்வு
புயல்களும், சூறாவளிகளும் பிரம்மாண்டமாகி வருகிறதாக கூறப்படுகிறது
வாஷிங்டன்: வர வர புயல்கள், சூறாவளிகள் எல்லாம் பிரமாண்டமாகிக் கொண்டு போவதாக புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது. அதாவது வழக்கமான புயல்களாக இல்லாமல் மிகப் பெரிய சூப்பர் புயல்களாகவே இனி எல்லாமே உருவாகக் கூடும் என்றும் அந்த ஆய்வு பயமுறுத்துகிறது. பார்க்க ஒரு புயலாகத்தான் தெரியுமாம்.. ஆனால் பல புயல்களுக்கு சமமான அசுரத்தனத்துடன் அவை உருவாவதாக ஆய்வுகள் சொல்லியுள்ளன.
Recommended Video
ஆம்பன் புயல் (அம்பன் என்றும் உச்சரிக்கிறார்கள்) இப்போது நமது நாட்டையும், வங்கதேசத்தையும் அச்சுறுத்திக் கொண்டுள்ளது. இரு நாடுகளிலும் பல லட்சம் பேர் பாதுகாப்பாக இடம் மாற்றப்பட்டுள்ளனர். இது சூப்பர் புயலாக மாறி தற்போது கொஞ்சம் வலுவிழந்து அதி தீவிர புயலாக மாறியுள்ளது.
இதுவரை வங்கக் கடலில் உருவான புயல்களிலேயே அதி பயங்கரமானது இது என்றும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் பயமுறுத்துகிறது. மறுபக்கம் கொரோனாவும் இன்னும் போகவில்லை. இந்தநிலையில்தான் அமெரிக்க ஆய்வு ஒன்றில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நூற்றாண்டில் வங்காள விரிகுடாவின் கடுமையான புயல் அம்பன் .. கொரோனாவுக்கு மத்தியில் பெரும் சவால்
சூறாவளிகள்
சமீப காலமாக உருவாகும் புயல்கள், சூறாவளிகள் குறித்த ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் தேசிய கடலியல் மற்றும் சூழலியல் நிர்வாகக் கழகம் மேற்கொண்டது. இதில் புயல்களின் சமீப கால பரிமாணம் குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முன்பு போல இல்லாமல் இப்போது உருவாகும் புயல்கள் எல்லாம் அசுரத்தனமாக இருப்பதாகவும், இதற்கு முக்கியக் காரணமே, கால நிலை மாற்றம்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுகள்
விஸ்கான்சின் மாகாண பல்கலைக்கழகத்தில் இதுதொடர்பான அறிக்கையை இதில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் சமர்ப்பித்துள்ளனர். கடந்த 40 வருடங்களாக பல்வேறு கடல் பரப்புகளில் உருவெடுத்த புயல்கள், சூறாவளிகள் உள்ளிட்டவற்றை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை இதில் வெளியிட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு பத்தாண்டிலும் புயல்கள் பல மடங்கு பலமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்கள்
மேலும் புயல்களின் வேகமும் ஒவ்வொரு பத்தாண்டுகளில் பல மடங்கு அதிகரித்து வருவதாகவும் சராசரியாக இவை மணிக்கு 110 கிலோமீட்டர் என்ற வேகத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்தாண்டிலும் புயல்களில் ஏற்படும் இந்த மாற்றத்தின் அளவானது 8 சதவீதம் அதிகமாக உள்ளது.
புயல்கள்
உலகம் முழுவதும் கடல்களின் வெப்பநிலை அதிகரிப்பு, காலநிலை மாற்றங்கள், புவியில் வெப்பம் அதிகரித்திருப்பது போன்றவையே புயல்கள் இந்த அளவுக்கு அதி தீவிரமாக மாறுவதற்கு முக்கியக் காரணம் என்று சொல்கிறார்கள். இந்த நிலை மாறாவிட்டால் வருங்காலத்தில் ஒரு புயல் தாக்கினால் அது பத்து புயல்களுக்கு சமமான சேதத்தை மக்களுக்கும், நிலப்பரப்புக்கும் ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது.
அதிக வாய்ப்பு
உலகம் முழுவதும் பெருமளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியவை 3 முதல் 5ம் வகையின் கீழ் வந்த சூப்பர் புயல்களே. இதுபோன்ற புயல்கள் மேலும் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. புவி வெப்பஅதிகரிப்பால் கடலின் வெப்ப நிலையும் அதிகரித்துள்ளது. இதுவே ராட்சத புயல்கள் உருவாக முக்கியக் காரணம். அதிகரித்த வெப்ப நிலை காரணமாக புயல்கள் படு வேகமாக ராட்சத நிலையை எட்டி விடுகின்றன.
என்னாகுமோ?
தற்போதைய ஆம்பன் புயலின் விஸ்வரூபத்துக்கும் கூட இதுவே முக்கியக் காரணம். இந்த புயலானது தற்போது 5ம் நிலை புயலுக்கு சமமான ராட்சத நிலையில் காணப்படுகிறது. திங்கள்கிழமையன்று இது மணிக்கு 270 கிலோமீட்டர் வேகத்திலான காற்றை உருவாக்கியது. இது மிக மோசமானதாகும். வங்கக் கடலில் தற்போது மேற்பரப்பு வெப்ப நிலையானது அதிக அளவில் உள்ளது. வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது. இதுவும் கூட ஆம்பன் புயல் கடுமையானதாக மாற முக்கியக் காரணம். ஒரு பக்கம் கொரோனா.. மறுபக்கம் ராட்சத புயல்கள்.. என்னாக போறதோ!!