அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. ஜனநாயகக் கட்சி தீர்மானம் கொண்டு வந்தது
அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடாளுமன்றத்தில் தங்களது முயற்சியை இன்று தொடங்கியுள்ளனர் ஜனநாயகக் கட்சியினர்.
வாஷிங்டன்: அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடாளுமன்றத்தில் தங்களது முயற்சியை இன்று தொடங்கியுள்ளனர் ஜனநாயகக் கட்சியினர். பதவி நீக்கம் செய்வதுடன் வெள்ளை மாளிகையை விட்டும் டிரம்ப்பை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை ஏற்க தற்போதைய அதிபர் டிரம்ப் தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்தார் டிரம்ப். அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருப்பதாகவும் குற்றம்சாட்டி வந்தார்.
டிரம்ப்பின் பேச்சுக்கள், கருத்துக்கள் அவரது ஆதரவாளர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து கடந்த வாரம் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் ஹில் கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்தனர். தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் காயமடைந்த பெண்ணும், காவலரும் மரணமடைந்தனர். 5 பேர் மரணத்திற்கு காரணமாக அமைந்து விட்டது அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டம்.
உலக அரங்கில் அதிபர் ட்ரம்புக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம். கேபிடல் ஹில் பகுதியில் கலவரம் ஏற்படக்காரணமான டிரம்ப், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 25 ஆம் திருத்தத்தின் கீழ், டிரம்ப் அதிபராக நீடிக்கத் தகுதியற்றவர் என்ற தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சபாநாயகர் பெலோசி கூறினார்.
இந்த நிலையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடாளுமன்றத்தில் தங்களது முயற்சியை இன்று தொடங்கியுள்ளனர் ஜனநாயகக் கட்சியினர். துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அமைச்சரவை இதை செய்ய வேண்டும். இதற்காக அரசியல் சட்டத்தின் 25வது பிரிவை பயன்படுத்தி டிரம்ப்பை நீக்க வேண்டும் என்று கோரி தீர்மானம் ஒன்றையும் அவர்கள் கொண்டு வந்துள்ளனர்.
அமெரிக்கா நாடாளுமன்ற வன்முறை: டிரம்ப்பை பதவியிலிருந்து நீக்கும் முயற்சி தொடங்கியது
பதவி நீக்கம் செய்வதுடன் வெள்ளை மாளிகையை விட்டும் டிரம்ப்பை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த தீர்மானத்தை உடனடியாக தடுத்த குடியரசுக் கட்சியினர் இந்த தீர்மானம் நிறைவேற விடாமல் தடுத்து விட்டனர்.
இதையடுத்து மீண்டும் ஒரு தீர்மானத்தை ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்துள்ளனர். அதில், 25வது சட்டப் பிரிவை உடனடியாக பயன்படுத்தி டிரம்ப்பை நீக்க வேண்டும் என்றும், கேபிடல் அலுவலகப் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக டிரம்ப்பை விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.