பதவிக் காலத்தின் கடைசி நாட்கள்... பறிபோகுமா டொனால்ட் டிரம்ப்பின் அதிபர் பதவி?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவியை பறிப்பதற்கான முயற்சிகளில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியின் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பதவி காலம் முடிவடைய சில நாட்களே இருக்கும் நிலையில் டிரம்ப்பின் பதவி பறிக்கப்படுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் (ஜோ பைடன்) வெற்றி பெற்றுள்ளார். புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20-ந் தேதி பதவி ஏற்க உள்ளார்.
அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வந்தார். இதன் உச்சமாக கடந்த 6-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தை டிரம்ப்பின் ஆதரவாளர்கள் சூறையாடி கொடூர தாக்குதலை நடத்தியது உலகையே உறைய வைத்தது. இந்த வன்முறைகளில் 5 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து டொனால்ட் டிரம்ப்-க்கு எதிராக கடும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. டிரம்ப்பின் குடியரசு கட்சியிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற வன்முறைகளை முன்வைத்து டொனால்ட் டிரம்ப்பின் பதவியை பறிக்கும் முயற்சிகள் படுதீவிரமடைந்துள்ளன.
முதல் கட்டமாக டிரம்ப்பின் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பறிக்க வகை செய்யும் 25-வது திருத்தத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்தனர். ஆனால் குடியரசு கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் கூடி 25-வது திருத்தம் மீது முடிவெடுக்கும். இந்த முடிவுகள் அடிப்படையில் டிரம்ப்பை பதவி நீக்கும் செய்யும் தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரலாற்றில் 1968-ல் ஆண்ட்ரூ ஜான்சன், 1998-ல் பில் கிளிண்டன் ஆகியோர் மீது விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியாகவில்லை. இதனால் அவர்கள் பதவி தப்பியது. தற்போது டொனால்ட் டிரம்ப் இதேபோன்ற நிலையை எதிர்நோக்கி உள்ளார். அதுவும் பதவி காலம் முடிவடைய சில நாட்களே உள்ள நிலையில் டிரம்ப்பின் பதவி பறிக்கப்படுமா? இல்லையா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.