டிரம்பிற்கு மேலும் பின்னடைவு.. ஜார்ஜியா தேர்தலில் வென்ற பைடன் கட்சியினர்
வாஷிங்டன்: டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவாக ஜார்ஜியா மேல் சபை தேர்தலில் இரு இடங்களையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலுடன் ஜார்ஜியா மாகாண மேல் சபை தேர்தலும் நடைபெற்றது. இரண்டு உறுப்பினர்களுக்கான இத்தேர்தலில், வெற்றிக்குத் தேவையான 50% வாக்குகளை யாரும் பெறவில்லை.
இதையடுத்து, இரு மேல் சபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான இறுதிக்கட்ட தேர்தல் ஜார்ஜியா மாகாணத்தில் ஜனவரி 5ஆம் தேதி நடைபெற்றது.
பேட்டை ரவுடி போல் நடந்து கொண்ட டிரம்ப்.. பதவிக்கு சற்றும் பொருந்தாத செயல்.. பறிபோகும் மானம்
ஜனநாயகக் கட்சி வெற்றி
இத்தேர்தலில் ஜனநாயக கட்சியின் ரெவரெண்ட் ரபேல் வார்னக் என்ற கறுப்பினத்தவர் சுமார் 22.57 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஜார்ஜியா மாகாணத்தில் வெற்றி பெற்ற மூன்றாவது கறுப்பினத்தவர் என்ற பெயரையும் அவர் பெற்றார். அதேபோல, மற்றொரு இடத்திற்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜான் ஓசாஃப் சுமார் 22.38 லட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை
இத்தேர்தல் மேல் சபையில் பெரும்பான்மையைத் தீர்மானிக்கும் தேர்தலாகப் பார்க்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம், மேல் சபை மற்றும் கீழ் சபை என இரண்டிலும் பைடன் அரசுக்குப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர் விரும்பும் அனைத்து சட்டங்களையும் எளிதில் நிறைவேற்ற முடியும்.
நாடாளுமன்றத்தில் வன்முறை
முன்னதாக, இன்று காலை ஜோ பைடனை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்தனர். இதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். தேர்தல் முடிவுகளை மாற்ற துடிக்கும் டிரம்பின் தூண்டுதலாலேயே இந்த வன்முறைச் சம்பவம் நடைபெற்றதாகப் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பதவியேற்பு
பெரும் குழப்பத்திற்கு மத்தியில், அமெரிக்க நாடாளுமன்றம் ஜோ பைடனை அதிபராகவும், கமலா ஹாரிஸை துணை அதிபராகவும் தேர்ந்தெடுத்தது. இருவரும் ஜனவரி 20ஆம் பதவியேற்றுக்கொள்ள உள்ளனர். இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையும் கிடைத்துள்ளது ஜனநாயக கட்சி ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.